"மருத்துவர்கள் அல்ல நக்சல்பாரிகள்....." நிகழ்ச்சிக்கு வராததால் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆவேசம்!
மருத்துவர்களை மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹீர் நக்சல்பாரிகள் என விமர்சனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மஹாராஷ்டிரா: மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் மருத்துவர்களை நக்சல்பாரிகள் என்றும், நக்சல் இயக்கத்தில் போய் சேருங்கள் அப்போது தான் உங்களை தோட்டாக்களால் நாங்கள் சுட முடியும் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் பகுதியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனையில் ஜென்ரிக் மருந்துகளை வழங்குவதற்காக கவுண்டரை திறந்து வைத்த அவர், விழாவில் மாவட்ட தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவமனை டீன் ஆகியோர் வராததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இது குறித்து கூறிய ஹன்ஸ்ராஜ் அஹீர், நான் ஒரு மத்திய அமைச்சர் என்னுடைய விழாவில் அவர்கள் கலந்துக்கொள்ள மாட்டார்களா. அவர்கள் மருத்துவர்கள் அல்ல, நக்சல்பாரிகள். அவர்கள் எதற்கு இங்கு மருந்துகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் நக்சல் இயக்கத்தில் சேர வேண்டியதானே, அப்போது தான் நாங்கள் அவர்களை எங்கள் தோட்டாக்களால் சுட முடியும் என்றார்.
இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள மாவட்ட தலைமை மருத்துவரும், மருத்துவமனை டீனும் தாங்கள் 10 நாட்கள் விடுமுறையில் உள்ளதாகவும், முறையான அழைப்பு யாருக்கும் கொடுக்கப்படாத நிலையில் எவ்வாறு நிகழ்ச்சி இருப்பதை நாங்கள் அறிந்துக்கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பினர். இந்த விழாவில் ஆட்சியருக்கும் முறையான அழைப்பு விடுக்கப்படாததால் அவரும் கலந்துக்கொள்ள வில்லை.
பாஜக ஆட்சியில் நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை, சுகாதாரத்துறையில் இந்த ஆட்சி அக்கறை செலுத்துவதில்லை என மருத்துவர்கள் புலம்பிக்கொண்டிருக்கும் நிலையில், மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.