மோடியின் காஷ்மீர் கொள்கை சரியானது.. ராஜ்நாத் சிங் உறுதி
மோடியின் காஷ்மீர் கொள்கை சரியானது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
டெல்லி: பிரதமர் மோடி அரசின் காஷ்மீர் கொள்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வந்த மெஹ்பூபா முஃப்தியின் அரசுக்கு பாஜக அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால் அங்கே ஆட்சி கவிழ்ந்தது. இதனால், மெஹ்பூபா முஃப்தி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இது குறித்து தி வீக் பத்திரிகைக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், "பாஜக தனது பணியை காஷ்மீரில் சிறப்பாகவே செய்துள்ளது. பாஜக காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியையும் வளர்ச்சியையும் கொண்டுவருவதற்கு எல்லாவற்றையும் முயற்சிக்கும்" என்று கூறியுள்ளார்.
அந்த நேர்காணலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மேலும் கூறுகையில், காஷ்மீர் பிரச்சனை மிகவும் பழமையானது. அது எல்லா அரசுகளுக்கும் மிகப் பெரிய சவாலாகவே இருந்து வருகிறது என்றும் அதை சரி செய்வதற்கு காலம் எடுத்துக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், காஷ்மீரில் பாகிஸ்தான் நிதி உதவியில் செயல்படும் தீவிரவாதம் தான் மிகப்பெரிய சவாலாகவும் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
மேலும், மோடியின் காஷ்மீர் கொள்கை தவறாக இருக்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், "இல்லை, பிரதமர் மோடியின் காஷ்மீர் கொள்கை சரியானது. அதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. காஷ்மீர் பிரச்சனையை சரி செய்வதற்கு காலம் எடுத்துக்கொள்ளும். இந்த பிரச்சனை இன்றோ நேற்றோ உருவானதில்லை." என்று கூறினார்.
ரம்ஜான் நோன்பின்போது காஷ்மீர் பகுதியில் இந்திய அரசு போர் நிறுத்தம் அறிவித்தது தவறானது என்று கருதுகிறீர்களா என்ற கேள்விக்க்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், " "போர் நிறுத்தம் அறிவித்தது தவறானது என்று நான் கருதவில்லை. ரம்ஜான் புனித மாதத்தில் அமைதியும் கொண்டாட்டமும் வேண்டி நின்ற மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், "பாகிஸ்தான் எங்களுடன் பேச முன்வந்தால் நாங்களும் பாகிஸ்தானிடம் பேசுவோம். ஆனால், முதலில் பாகிஸ்தான் தனது மண்ணில் தீவிரவாதத்தை வெளியேற்றும் என்பதை அறிவிக்க வேண்டும்" என்று கூறினார்.