ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது - வெங்கையா நாயுடு மகிழ்ச்சி!
குல்பூஷண் ஜாதவ் மரண தண்டணைக்கு விதிக்கப்பட்ட தடை இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லி: குல்பூஷண் ஜாதவ் மரண தண்டணைக்கு விதிக்கப்பட்ட தடை இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இறுதி தீர்ப்பும் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார்.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை ஜாதவ் மறுத்தார். எனினும் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இடைக்கால தடை
இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா அணுகியது. இந்த வழக்கில் நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.அப்போது குல்பூஷன் ஜாதவுக்கான மரண தண்டைனைக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி
இதுகுறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
|
நீதி வெற்றி பெற்றிருக்கிறது
சர்வதேச நீதிமன்றம் இந்தியாவின் தூதரக உரிமைகளை ஆதரித்து மரண தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்துள்ளது. நீதி வெற்றி பெற்றிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
|
இறுதித்தீர்ப்பும் நமக்கே..
தனது மற்றொரு டிவீட்டில்,குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்துள்ளதன் மூலம் சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தானை அம்பலப்படுத்தியுள்ளது. இறுதித் தீர்ப்பும் நமக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.