பசுவதை செய்கிறது பாஜக.. சீட் கொடுக்காத விரக்தியில் மத்திய அமைச்சர் புலம்பல்
சண்டிகர்: மக்களவை தேர்தலில் போட்டியிட்ட சீட் மறுக்கப்பட்டதால் கோபத்தில் இருக்கும் மத்திய இணை அமைச்சர் விஜய் சம்பலா, பாஜக பசுவதை செய்வதாக குற்றம்சாட்டி உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் பாஜக தலைவர்களில் ஒருவர் விஜய் சாம்பலா. இவர் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
தலித் தலைவரான இவர், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் போய் சேரவில்லை என குற்றம்சாட்டி வந்தார்.
எனக்கு ஏன் கோபம் வராது தெரியுமா?.. அக்ஷய்குமாருக்கு பிரதமர் மோடி அளித்த திடீர் பேட்டி
வேறு ஒருவருக்கு சீட்
இவர் ஹோசியாபூர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு இருந்தார்.ஆனால் இவருக்கு பதிலாக பக்வாரா தொகுதி எம்எல்ஏ சோம் பிரகாஷ்க்கு சீட் கொடுத்துள்ளது. விஜய் சாம்பாலவுக்கு இந்த தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படவில்லை.
அடைமொழி நீக்கம்
இதனால் விரக்தியிலும் அதிருப்தியிலும் இருந்த மத்திய இணையமைச்சர் விஜய் சாம்பலா, தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து சௌகிதார் என்ற அடைமொழியை நீக்கினார்.
மாடுகள் கொலை
அதன் பின்னர் கோபத்தில் அவர் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் " நான் மிகவும் சோகத்தில் இருக்கிறேன், பாரதிய ஜனதா பசுவதை செய்துள்ளது என குற்றம்சாட்டினார். மற்றொரு டுவிட்டில் "ஏதேனும் தவறு இருக்கிறதா என்பதை நீங்கள் (பாஜக) சொல்ல வேண்டும். என் மீது என்ன தவறு இருககிறது.
ஊழல் புகார் இல்லை
என் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை. யாரும் எனக்கு எதிராக குற்றம்சாட்டவில்லை . நான் என் ஊருக்கு ஏர்போர்ட் கொண்டு வந்துள்ளேன். ஏராளமான ரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். சாலை வசதிகளை ஏற்படுத்தி உள்ளேன். இதுபோன்ற ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன்.
தவறுகளை சொல்லுங்கள்
இது தான் தவறு என்று சொல்கிறீர்களா? எனது வருங்கால சந்ததியினருக்கு இந்த மாதிரியான தவறுகளை எல்லாம் செய்ய வேண்டாம் என சொல்வேன்" என விரக்தியில் கூறியுள்ளார்.இதனிடையே அண்மையில் பாஜகவில் சேர்ந்த நடிகர் சன்னி தியோல் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில், பாஜக சார்பில் போட்டியிட உள்ளார்.