எங்கள் இதயத்திலும் ரத்தம் கொட்டுகிறது: மன்மோகனுக்கு மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு!
டெல்லி: தெலுங்கானாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துவதை பற்றி பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று அமைச்சர்கள் சிரஞ்சீவி, சூர்யபிரகாஷ் ரெட்டி , கே.எஸ்.ராவ், புரந்தரேஸ்வரி ஆகியோர் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து சபாநாயர் முன்பு முழக்கங்களை எழுப்பினர். அவர்களுக்கு ஆதரவாக அமைச்சர்கள் பல்லம் ராஜூ, கிருபாராணி ஆகியோர் தங்களது இருக்கையில் எழுந்து நின்றனர்.
அத்துடன் சீமாந்திரா எம்.பிக்கள் ரயில்வே பட்ஜெட்டை கிழித்து எறிந்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன்சிங், இதயத்தில் இருந்து ரத்தம் கொட்டுகிறது என்று கூறியிருந்தார். இதற்கு மத்திய அமைச்சர்கள் கே.எஸ்.ராவ், பல்லம் ராஜூ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். ராவ், எங்கள் இதயத்திலும் கூட ரத்தம் கொட்டுகிறது. சில அரசியல் லாபங்களுக்காக ஒரு சில தொகுதிகளுக்காக ஆந்திராவை பிரிக்கிறார்களே என்றார்.
இதேபோல் பல்லம் ராஜூ கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்க ஒன்றல்ல. தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஒரு கருத்து பொதுவாக நிலவிவருகிறது. லோக்சபாவில் இதற்கான இறுதிக்கட்டப் போரை நிகழ்த்த வேண்டும் என்று எங்கள் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.