போலீசாரிடம் லஞ்சம், நடிகையுடன் உல்லாசம்! அமைச்சர்கள் மகன்களும், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும்!!
டெல்லி: பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்களின் வாரிசுகள் மீது அடுத்தடுத்து வரும் குற்றச்சாட்டுகளால் அரசு நிலை குலைந்து போயுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள 11 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட தனது மகன் பங்கஜ்சிங்கிற்கு வாய்ப்பு கேட்டார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.
ஆனால் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் பங்கஜ்சிங் பெயர் இடம்பெறவில்லை. பாஜக தலைவராக இருந்த ராஜ்நாத்சிங், பிரதமருக்கு அடுத்த அதிகாரம் படைத்த மத்திய உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்துவருகிறார். அவரின் மகனுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதற்கு முறைகேடு புகார்தான் காரணம் என்ற தகவல் வெளியானது.
போலீசாரிடமே லஞ்சமா?
அதாவது, மத்திய அமைச்சராக தனது தந்தை பதவி வகிப்பதை பயன்படுத்திக்கொண்டு பங்கஜ்சிங், போலீசாரிடம் லஞ்சம் பெற்றதாக சில ஊடகங்களில் செய்திகள் கசிந்தன.
பாஜகவும் இப்படியா..
காங்கிரஸ் அரசில் அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் நேர்மையான நிர்வாகம் அளிப்போம் என்று வாக்களித்து ஆட்சிக்கு வந்த பாஜக அரசின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியலைவிட்டு விலகுவேன்
இதையடுத்து ராஜ்நாத்சிங் அளித்த பேட்டியில், தனது மகன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அரசியலை விட்டே தான் விலகிவிடுவதாக அறிவித்தார்.
பிரதமர் அலுவலகம் விளக்கம்
இந்த அறிவிப்பு வந்த சில நிமிடங்களில் பிரதமர் அலுவலகமும் ராஜ்நாத்சிங்கிற்கு ஆதரவு கரம் நீட்டும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், ராஜ்நாத்சிங் மகன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
ஒரே நாளில் அடுத்தது
ராஜ்நாத்சிங் மகன் குறித்த பரபரப்பு நேற்று பகல் முழுவதும் நீடித்தது என்றால், இரவு ஆனதும், மற்றொரு அமைச்சர் மகன் மீதான குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்தது.
சதானந்தகவுடா மகன் மீது புகார்
அந்த அமைச்சர் வேறுயாருமில்லை, ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடாதான். அவரது மகன் கார்த்திக் மீது நடிகை மைத்ரேயா என்பவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி வேறு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தத்தை கார்த்திக் முடித்துக்கொண்டதாக மைத்ரேயா குற்றம் சாட்டியுள்ளார்.
மகளிர் ஆணையம் விசாரிக்க முடிவு
இந்த விவகாரம் இன்று தொடர்ந்து பரபரப்பை கிளப்பிவரும் விவகாரமாக மாறியுள்ளது. கர்நாடக மகளிர் ஆணையமும் இப்பிரச்சினையில் விசாரணை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
சதியா?
மத்திய அமைச்சரவையில் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் ராஜ்நாத்சிங் மற்றும் சதானந்தகவுடா. இவர்கள் இருவரது மகன்கள் மீதும் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளது பல்வேறு ஐயப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. தக்க விசாரணைக்கு பிறகே இதிலுள்ள உண்மைகள் தெரியவரும்.