"இ ரிக்ஷா" தயாரிப்பில் நிதின் கட்காரி நிறுவனம்? தடையை நீக்கியதன் பின்னணி குறித்து "திடுக்" தகவல்கள்!
டெல்லி: தடை செய்யப்பட்ட இ ரிக்ஷாக்களுக்கு டெல்லியில் சட்டப்பூர்வமான அனுமதியை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி வழங்கியதே தமது குடும்ப நிறுவனங்கள் ஆதாயம் அடைவதற்காகத்தான் என்று திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அமைச்சர் நிதின் கட்சிகாரியோ இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
டெல்லியில் பேட்டரி ரிக்ஷாக்களை சட்டவிரோத வாகனம் என்று மத்திய அரசு கடந்த ஏப்ரல் 24ந் தேதி அறிவித்தது. இதையடுத்து, டெல்லியில் பேட்டரி ரிக்ஷாக்களை பறிமுதல் செய்ய போக்குவரத்துத் துறை முடிவு செய்தது.
இதன் பின்னர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்த போது டெல்லியில் பேட்டரி ரிக்ஷாக்களை முறைப்படுத்தும் வகையில், "தீன தயாள் இ-ரிக்ஷா' திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தார்.
அத்துடன் இ ரிக்ஷாக்களுக்கு விதிக்கப்பட்ட தடை முழுமையாக நீக்கப்பட்டு அது முறைப்படுத்தும் அறிவிப்புகளையும் அடுத்தடுத்து நிதின் கட்காரி
இந்த நிலையில் இ ரிக்ஷாக்களை உற்பத்தி செய்யக் கூடிய நிதின் கட்காரியின் புர்தி குழுமத்தைச் சேர்ந்த புர்தி கிரீன் டெக்னால்ஜிஸ் நிறுவனம் ஆதாயம் அடைவதற்காகவே தடை விலக்கப்பட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மறுத்துள்ளார். இ ரிக்ஷாக்கள் தயாரிப்பு நிறுவனத்தில் தமது உறவினர்கள் யாரும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக மறு\ப்பு தெரிவித்திருக்கிறார்.