பெங்களூர் சாலை பள்ளத்தில் தோன்றிய 'கடல் கன்னி'! சதி என்கிறது காங். அரசு
Recommended Video
பெங்களூர்: பெங்களூரில் சாலை பள்ளங்களுக்கு (potholes) எதிராக போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.
நாட்டின் ஐடி தலைநகர் என புகழப்படும் பெங்களூரில் இவ்வாண்டு செப்டம்பரில் சாதனை அளவு மழை பெய்தது. அக்டோபரிலும் மழை தொடர்ந்தபடி உள்ளது. இதனால் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிட்டன.
சாலை பள்ளங்கள் காரணமாக நகரில் விபத்துகள் அதிகரித்துள்ளன. சாலை பள்ளங்களில் விழுந்தோ, அல்லது அதை தவிர்க்க முற்பட்டு வாகனத்தை திடீரென திருப்பும்போது பிற வாகனங்கள் இடித்தோ இறந்தோர் எண்ணிக்கை, இம்மாதத்தின் முதல் 10 நாளில் 4ஆக உயர்ந்தது. பலரும் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.
பள்ளங்களுக்கு எதிராக அணி திரளும் மக்கள்
சாலை பள்ளங்களால் கார்கள் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. சாலை பள்ளங்களை மூட அரசு துரிதம் காட்டவில்லை என்பதால் பெங்களூரில் ஆங்காங்கு மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
|
கடல் கன்னி
பெங்களூரின் மையப்பகுதியான கப்பன் பார்க் ஜக்ஷனும் சாலை பள்ளத்தில் இருந்து தப்பாத ஏரியாதான். இங்கு ஓவிய கலைஞர்கள் இணைந்து, சாலை பள்ளத்தில் குளம் போல தண்ணீர் வரைந்து, அதில் 'கடல் கன்னி' போன்ற வேடமணிந்த பெண் குளிக்கச் செல்வதை போன்று டிராமா நடத்தப்பட்டது. அரசின் கவனத்தை ஈர்க்க இதுபோல பல்வேறு வகையான போராட்டங்கள் பெங்களூரில் நடக்கின்றன.
இதெப்படி இருக்கு
அதேநேரம், கர்நாடக முதல்வர் சித்தராமையாவோ, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். "பெங்களூரில் சாலை பள்ளங்களால் 4 பேர் உயிரிழந்துள்ளனரே" என்ற நிருபர்கள் கேள்விக்கு, "சாலை பள்ளங்களால் இல்லை, சாலை விபத்துகளால் அவர்கள் இறந்தனர்" என்று சித்தராமையாய பதிலளித்தார்.
பெங்களூர் பெயரை கெடுப்பதே வேலை
பெங்களூர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் இன்னும் ஒருபடி மேலேபோய், ஆங்கில ஊடகங்கள், பெங்களூரின் நற்பெயரை கெடுக்க இதுபோன்ற பிரசாரங்கள் நடத்துவதாக தெரிவித்தார். மேலும், விபத்து நடந்த இடம் ஒன்றில், எடுக்கப்பட்ட போட்டோவை காண்பித்து இதில் சாலை பள்ளமே இல்லையே என அவர் நிருபர்களிடம் பதில் கேள்வி கேட்டார். ஆனால், பத்திரிகைகளில் வெளியான போட்டோக்கள் மற்றும் நிருபர்களின் கள ஆய்வில் விபத்து நடந்த இடத்தின் அருகே பெரும் பள்ளங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
|
பணிகள் நடப்பதாக அறிவிப்பு
ஒருபக்கம், ஊடகங்கள்தான் பெங்களூர் இமேஜை கெடுக்கின்றன என அமைச்சர் ஜார்ஜ் குற்றம்சாட்டினாலும், சாலை பள்ளங்களை மூடும் பணி வேகமாக நடைபெற்றுவருவதாக தனது சோஷியல் மீடியா பக்கங்களில் படங்கள் வெளியிட்டபடி உள்ளார் ஜார்ஜ். சாலை பள்ளங்களுக்கு எதிரான போராட்டங்கள் வெவ்வேறு வடிவம் எடுப்பதால், விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள கர்நாடகாவில், ஆளும் காங்கிரசுக்கு, நெருக்கடி ஏற்பட்டுள்ளது.