முட்டையை உடைத்ததற்கு இப்படி ஒரு தண்டனையா? வீட்டிற்குள் நுழைய முடியாமல் தவிக்கும் 5 வயது சிறுமி
பறவை முட்டையை உடைத்ததற்காக ஊர் பஞ்சாயத்து 5 வயது சிறுமிக்கு நூதன தண்டனை வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் பறவை முட்டையை உடைத்ததற்காக ஊர் பஞ்சாயத்து 5 வயது சிறுமிக்கு விநோத தண்டனை வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் ஒரு பக்கம் கல்வி, அறிவியல் என வளர்ச்சியடைந்தாலும் மறுபக்கம் மூட நம்பிக்கையும் செழித்தோங்கிதான் வருகிறது. இதற்கு தலைநகர் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் அண்மையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவமே போதும்.
இந்நிலையில் ராஜஸ்தானில் மழை வரும் என்பதை கூறும் பறவையின் முட்டையை உடைத்ததற்காக 5 வயது சிறுமிக்கு ஊர் பஞ்சாயத்து விநோத தண்டனை விதித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 வயது சிறுமி
ராஜஸ்தான் மாநிலம் புண்டி மாவட்டத்தில் உள்ளது ஹரிபுரா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த 5வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.
முட்டையை உடைத்த சிறுமி
அப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட பறவை இனம் ஒன்று மழை காலத்தை அறிவிப்பதாக அக்கிராமத்தினர் நம்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி அச்சிறுமி அந்த பறவையின் முட்டை சிலவற்றை உடைத்துள்ளார்.
முட்டையை உடைத்ததற்கு பஞ்சாயத்து
இதுகுறித்து தகவலறிந்த ஊர்காரர்கள் இது குறித்து விசாரணை நடத்த பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர். பஞ்சாயத்தை கேட்க அப்பகுதி மக்களும் அங்கு திரண்டிருந்தனர்.
விநோத தண்டனை
அப்போது சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பறவையின் முட்டையை உடைத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அச்சிறுமிக்கு குற்றத்துக்கான தண்டனையை வழங்க முடிவு செய்த பஞ்சாயத்து, அச்சிறுமி 10 நாட்களுக்கு வீட்டிற்குள் செல்ல தடை விதித்தது.
போலீஸ் விசாரணை
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை பஞ்சாயத்து தீர்ப்பு குறித்து போலீஸில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
10 பேர் கைது
குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து 10 பேர்கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு
இதனிடையே 5 வயது சிறுமிக்கு தண்டனை வழங்கிய விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையமும் அறிக்கை கேட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி இது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் வேண்டும் என்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.