மோடி ஆட்சியில் தலைநகரில் ஒரு இடதுசாரி பெரு வெற்றி!
ஜே .என் .யு மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி அணி வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி அணி அமர்க்களமாக வெற்றி பெற்றுள்ளது.
ஜே .என் .யு பல்கலைக்கழகம் காலங்காலமாகவே ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகம் ஆகும். அனல் பறக்கும் அரசியல் விவாதங்கள் அனைத்துமே இந்த பல்கலைக்கழகத்தில் நிகழும்!
அதேபோல ஆளும் அரசுகளின் கொள்கைகள் எதுவானாலும் அதன் மீதான விமர்சனங்களும் மாறி மாறி வைக்கப்பட்டு விவாதிக்கப்படும்!! அது மட்டுமல்ல, உலகத்தின் ஒட்டுமொத்த அரசியல் பார்வைகள் ஊடுருவி பாயக்கூடிய இடம்தான் இந்த ஜே.என்.யு. பல்கலைக்கழகம்!!
முற்போக்கு இயக்கங்கள்
நன்றாக படித்து முன்னுக்கு வந்து சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு இந்த பல்கலைக்கழகம் ஒரு குறிக்கோளாகவே கண்முன் வந்து நிற்கிறது. இந்த பல்கலைக் கழகத்தில் முற்போக்கான செயல்பாடுகளும், இயக்கங்களும் அதிகம். அதில் முக்கியமானது, இடதுசாரி மாணவர் இயக்கங்கள்தான்.
மோசமான கல்வி கொள்கை
பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இந்த பல்கலைக்கழகத்தின் மீது ஒரு கண் வைத்துவிட்டதை மறுக்க முடியாது. இதனால் இங்கு அடிக்கடி மோதல்கள், தாக்குதல்கள். எங்கு கல்விக்கு எதிரான அநீதி நடந்தாலும் இடதுசாரி மாணவர் இயக்கமானது முன்னுக்கு வந்து நின்று பிரச்சனையை கையில் எடுக்கும். மத்திய அரசின் மோசமான கல்விக்கொள்கைகள் தங்களின் கண்ணுக்கு தென்பட்டுவிட்டால், அணியை திரட்டி வந்துவிடுவார்கள்.
ஒற்றுமையே பலம்
அதேபோல மத்திய அரசின் பொருளாதார கொள்கையையும் தவறாது எதிர்த்தே வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் தலித் மாணவர்கள் மீதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அவ்வளவு எதற்கு? தலித் மாணவர் இயக்கங்களே இருக்கக்கூடாது என்றே பாஜக நினைத்து பல எதிரான காரியங்களுக்கு காய்களையும் நகர்த்தியுள்ளது. மத்திய அரசின் எந்தவிதமான சலசலப்புக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் உறுதியாகவும், ஒற்றுமையாகவும் தற்போதுவரை இருப்பதுதான் இவர்களின் பலமே.
இடது சாரி அணி வெற்றி
இப்படிப்பட்ட ஒரு பிண்ணயில்தான் பல்கலை மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இடதுசாரி அணி வெற்றி பெற்று மீண்டும் கல்வி அரங்கினை திரும்பி பார்க்க வைத்துள்ளது. உயர் கல்வி அமைப்பையும் தன்பிடியில் வைத்து கொள்ள நினைக்க துடிக்கும் பாஜக அரசிற்கு இந்த அணியின் வெற்றி மிகப் பெரிய ஒரு சறுக்கல்!!
மதவாதம் தூசிதான்
எவ்வளவுதான் ஆட்சியில் இருந்து கொண்டு உயர்கல்விக்கு எதிரான செயல்களையும், தலித் மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் எடுத்தாலும், மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதையே இந்த வெற்றி பறைசாற்றி உள்ளது. கல்விக்கு முன்பு மதவாதம் என்பது ஒரு தூசு என்பதை இடதுசாரி மாணவர்களின் வெற்றி நிரூபித்துள்ளது.