வாக்குப் பதிவு இயந்திர முறைகேடு.. தேர்தல் ஆணையத்துக்கு ஆலோசனை சொல்ல நால்வர் குழு!
கொல்கத்தா: பாஜகவின் வாக்குப் பதிவு இயந்திர மோசடியை தடுக்க 4 பேர் கொண்ட தனிக்குழுவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அமைத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று முன் தினம் பொதுக் கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், பாருக் அப்துல்லா, சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கேஜரிவால், அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அத்தனை தலைவர்களும் வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு பாஜக முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் தலைவர்கள் குற்றம்சாட்டினர். இந்த கூட்டத்தில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லா, மின்னணி வாக்குப் பதிவு இயந்திரம் ஒரு திருட்டு இயந்திரம். தேர்தலில் வெளிப்படைத்தன்மை வேண்டுமென்றால் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி கூறுகையில், பாஜகவின் முறைகேடுகளை தடுக்க எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய 4 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்படுகிறது. அதில் அபிஷேக் மனு சிங்வி (காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி), சதீஷ் மிஸ்ரா (பகுஜன் சமாஜ்) மற்றும் அரவிந்த் கேஜரிவால் (ஆம் ஆத்மி) ஆகியோர் இடம் பெறுவார்கள்.
இவர்கள் வாக்குப் பதிவு இயந்திரத்தின் முறைகேடுகளை தடுக்க வாக்குப் பதிவு ஒப்புகை சீட்டை அமல்படுத்துவது குறித்தும் பழைய நடைமுறையான வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துவதையும் அமல்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைப்பர். வாக்குப் பதிவு இயந்திரங்களின் மோசடியைக் கண்டறிந்து அதையும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம் என்றார் மம்தா.