1,000 டன் தங்கப் புதையல்.. 2வது நாளாக தோண்டும் பணி
உன்னாவ்: உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 1,000 டன் தங்கப் புதையல் இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் 2வது நாளாக தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
உன்னாவ் அருகே கெடா எனும் கிராமத்தில் மன்னர் ராஜா ராவ் ராம் பாக் சிங் என்பவரது சிதிலமடைந்த கோட்டை உள்ளது. இவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தூக்கிலிடப்பட்டார்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த சோபன் சர்க்கார் என்பவர் கனவில் மன்னர் தோன்றி, தமது கோட்டையில் 1,000 டன் புதையல் இருப்பதாக தெரிவித்தாராம். இதைத் தொடர்ந்து நேற்று கோட்டையில் புதையலைத் தோண்டும் பணி தொடங்கியது.
இன்றும் அந்த கோட்டையில் 2வது நாளாக புதையலைத் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் புதையலுக்கான அறிகுறி இருப்பதாக தென்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே எந்த ஒரு புதையலையும் தோண்டி எடுப்பதற்கு அறிவியல் பூர்வமான லாஜிக் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் அப்படி ஏதும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விமர்சித்திருக்கிறார்.