உன்னோவ் வழக்கிலிருந்து விடுகிறோம் 1 கோடி கொடுங்கள்.. பாஜக எம்எல்ஏ வீட்டில் நுழைந்த போலி சிபிஐக்கள்
பெண் ஒருவரை வன்புணர்வு செய்ததாக கைது செய்யப்பட்டு இருக்கும் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரின் மனைவியிடம் ஒரு கோடி கேட்டு, இரண்டு பேர் சிபிஐ அதிகாரிகள் போல் மோசடி செய்ய முயற்சித்துள்ளனர்.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் உன்னோவ் பகுதியில் பெண் ஒருவரை வன்புணர்வு செய்ததாக கைது செய்யப்பட்டு இருக்கும் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரின் மனைவியிடம் ரூபாய் 1 கோடி கேட்டு, இரண்டு பேர் சிபிஐ அதிகாரிகள் போல் மோசடி செய்ய முயற்சித்துள்ளனர்.
தன்னை பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் ஒருவருடத்திற்கு முன்பு பாலியல் வன்புணர்வு செய்தார் என்று பெண் ஒருவர் குற்றச்சாட்டு வைத்தார். இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் குடும்பத்தோடு உத்தர பிரதேச முதல்வர் யோகியின் வீடு முன்பு சென்று தீ குளிக்க முயன்றார்.
ஆனால் அப்போது எம்.எல்.ஏ குல்தீப் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குல்தீப்பின் சகோதரரும், சில பாஜக ஆட்களும் அந்த பெண்ணின் தந்தை சுரேந்திர சிங்கை தாக்கி உள்ளனர். இதனால் சுரேந்திர சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இப்போது இதில் குல்தீப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் குல்தீப் மனைவிக்கு நேற்று முதல்நாள் முக்கியமான போன் கால் ஒன்று வந்துள்ளது. அதில் 1 கோடி ரூபாய் பணம் கேட்டு ஒரு நபர் பேசியுள்ளார். அவர் தன்னை சிபிஐ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, 1 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் இந்த வழக்கில் குல்தீப் எந்த குற்றமும் செய்யாதவர் என்று சாட்சிகளை மாற்றிவிடுவோம் என்று கூறியுள்ளார்.
அதோடு சிபிஐ போல நாடகமாடிய அலோக் திவேதி என்ற நபரும், அவருடைய நண்பர் விஜய் ராவத் என்பவரும் குல்தீப்பின் மனைவியை நேரிலும் சந்தித்து பணம் கேட்டு இருக்கிறார்கள். சந்தேகம் வந்த குல்தீப்பின் மனைவி போலீசிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீஸ் அந்த இரண்டு நபர்களின் போன் நம்பரை வைத்து டிராக் செய்து இருவரையும் கண்டுபிடித்தது. குல்தீப் மனைவி மனவருத்தத்தில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.