உன்னோவ் கொடூரம்.. வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் ஊர்காரர்களை மிரட்டும் பாஜகவினர்
உத்தர பிரதேசத்தில் உன்னோவ் பகுதியில் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் சொந்த ஊர் மக்களை பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் ஆட்கள் மிரட்டி வருகின்றனர்.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் உன்னோவ் பகுதியில் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் சொந்த ஊர் மக்களை பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் ஆட்கள் மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தன்னை பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் ஒருவருடத்திற்கு முன்பு பாலியல் வன்புணர்வு செய்தார் என்று பெண் ஒருவர் குற்றச்சாட்டு வைத்தார்.இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த பெண் குடும்பத்தோடு உத்தர பிரதேச முதல்வர் யோகியின் வீடு முன்பு சென்று தீ குளிக்க முயன்றார்.
ஆனால் எம்.எல்.ஏ குல்தீப் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குல்தீப்பின் சகோதரரும், சில பாஜக ஆட்களும் அந்த பெண்ணின் தந்தை சுரேந்திர சிங்கை தாக்கி உள்ளனர். இதனால் சுரேந்திர சிங்கின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இப்போதுவரை இதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அந்த பெண்ணின் குடும்பத்தை குல்தீப் ஆட்கள் மீண்டும் கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். அதேபோல் அவர்களின் கிராமமான மாகியில் உள்ள மக்களை பாஜக அடியாட்கள் மிரட்டி இருக்கிறார்கள். இரண்டு காரில் நேற்று இரவு அங்கு சென்றவர்கள், துப்பாக்கி, கத்தி காட்டி மக்களை மிரட்டியுள்ளனர். இதுபற்றி பேச கூடாது என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில் அந்த பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் இரண்டு பேர் திடீரென்று காணாமல் போய் இருக்கின்றனர். இவர்களை பாஜக ஆட்கள் கடத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.