உன்னோவ் பலாத்காரம்- குற்றவாளி எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக பாஜக பேரணி
பெண் ஒருவரை வன்புணர்வு செய்ததாக கைது செய்யப்பட்டு இருக்கும் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரருக்கு ஆதரவாக உன்னோவ் பகுதியை சேர்ந்த பாஜகவினர், பேரணி நடத்தி இருக்கிறார்கள்.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் உன்னோவ் பகுதியில் பெண் ஒருவரை வன்புணர்வு செய்ததாக கைது செய்யப்பட்டு இருக்கும் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரருக்கு ஆதரவாக அந்த பகுதியை சேர்ந்த பாஜகவினர், பேரணி நடத்தி இருக்கிறார்கள்.
தன்னை பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் ஒருவருடத்திற்கு முன்பு பாலியல் வன்புணர்வு செய்தார் என்று பெண் ஒருவர் குற்றச்சாட்டு வைத்தார். இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் குடும்பத்தோடு உத்தர பிரதேச முதல்வர் யோகியின் வீடு முன்பு சென்று தீ குளிக்க முயன்றார்.
ஆனால் அப்போது எம்.எல்.ஏ குல்தீப் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குல்தீப்பின் சகோதரரும், சில பாஜக ஆட்களும் அந்த பெண்ணின் தந்தை சுரேந்திர சிங்கை தாக்கி உள்ளனர். இதனால் சுரேந்திர சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இப்போதுவரை இதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் குல்தீப்பும் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பாஜகவினர் சிலர் உறுதுணையாக இருக்கின்றனர் என்று புகார் வந்துள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட 'ஒய்' பிரிவு பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் குல்தீப் சிங் செங்காரருக்கு ஆதரவாக அந்த பகுதியை சேர்ந்த பாஜகவினர், பேரணி நடத்தி இருக்கிறார்கள். இந்த பேரணிக்கு அந்த பகுதியின் பாஜக உறுப்பினரும் பஞ்சாயத்து தலைவருமான அனுஜ் குமார் தலைமை வகித்து இருக்கிறார். அரசியல் பழிவாங்கும் நிகழ்விற்காக, இந்த புகார் குல்தீப் மீது போடப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஊர் மக்களை மிரட்டி, அந்த பேரணியில் நடந்து வர சொல்லி இருக்கிறார்கள். அதேபோல் குல்தீப்பிற்கு ஆதரவாக கூச்சலிடவும் சொல்லியுள்ளனர். ஏற்கனவே காஷ்மீர் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட போது, குற்றவாளிக்கு ஆதரவாக பாஜகவினர் இதேபோல் பேரணி நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.