ஓய்ந்தது அயோத்தி பிரச்னை.. அடுத்தது சபரிமலைதான்.. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு தீவிரம்!
Recommended Video
பத்தினம்திட்டா: 70 ஆண்டுகால அயோத்தி பிரச்சினையில் தீர்ப்பு அளித்த நிலையில் இன்னும் சில நாட்களில் சபரிமலையில் இளம்பெண்கள் அனுமதி குறித்து தீர்ப்பு வெளியாகவுள்ளதால் அங்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில். உலக பிரசித்தி பெற்ற இந்த திருத்தலத்தில் காலம்காலமாக 10 வயது முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, அனைத்து வயதினரும் சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஒரு தீர்ப்பை வழங்கியது.
அயோத்தி தீர்ப்பு.. 24 முறை மதசார்பின்மை வார்த்தையை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்
இளம்பெண்கள்
இதற்கு கேரளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின்னர் மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது இளம்பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது அவர்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
எனினும் போலீஸ் பாதுகாப்புடன் கேரளத்தை சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய மாதவிடாய் பருவத்தில் உள்ள இரு பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி கேரளத்தை சேர்ந்த நாயர் சர்வீஸ் சொசைட்டி அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
கேரளத்தில்
இந்த நிலையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். எனவே அதற்கு முன்பாக சபரிமலை விவகாரம் தொடர்பாக தீர்ப்பு வெளியாகவுள்ளது. இதனால் கேரளத்தில் மீண்டும் பரபரப்பான சூழல் எழுந்துள்ளது.
பதற்றமான சூழல்
மேலும் மண்டல பூஜைக்கா ஐயப்பன் கோயில் நடை வரும் 16-ஆம் தேதி திறக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த ஒரு அமைப்பினர் சுவாமி தரிசனம் செய்வோம் என அறிவித்திருந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
போலீஸார்
இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. கமான்டோ வீரர்கள், அதி விரைவு அதிரடி படையினர் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்படவுள்ளனர். 70 ஆண்டு கால அயோத்தி வழக்கில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.