இதுவரை இல்லாத நிகழ்வுகள் அரங்கேறுவதால் பரபரப்பு.. இந்திய நீதித்துறையில் நடப்பது என்ன?
Recommended Video
டெல்லி: நாட்டின் நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக, உச்சநீதிமன்றத்தில் 4 நீதிபதிகள், தலைமை நீதிபதிக்கு எதிராக பொது வெளியில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சிப்பாய் கலகம் போல, நீதித்துறையில் வெடித்த புரட்சியா என்று மக்கள் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
டெல்லியில் இன்று மதியம் திடீரென பத்திரிகையாளர் சந்திப்புக்கு சுப்ரீம் கோர்ட்டின் 4 நீதிபதிகள் அழைப்புவிடுத்துள்ளதாக தகவல் வந்ததும், மொத்த மீடியா உலகமும் பரபரப்படைந்தது.
நீதிமன்ற செய்திகளை சேகரிக்கும் நிருபர்களுக்கே எதற்காக இந்த அவசர பத்திரிகையாளர் சந்திப்பு என்பது புரியவில்லை. காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு, நீதிபதிகள் இல்லத்திற்கு பறந்தனர்.
நான்கு நீதிபதிகள் பேட்டி
நீதிபதிகள் செல்லமேஸ்வர், மதன் லோக்கூர், கோகாய் மற்றும் குரியன் ஜோசப் ஆகிய நால்வரும் நிருபர்களை சந்தித்தனர். இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு சந்திப்பு நிகழ்வதை அவர்களும் ஒப்புக்கொண்டே பேட்டியை ஆரம்பித்தனர். ஆனால், தாங்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட அவர்கள் மறக்கவில்லை.
முதல் முறை
நீதிபதிகள் பேட்டி, முழுக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதாக இருந்தது. அவரது செயல்பாடுகளில் அதிருப்தி வெளிப்படுத்தியதாகவும், அதை அவரிடமே கூறியதாகவும், ஆனால் நிராகரிப்புக்கு உள்ளானதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். இந்திய நீதித்துறையை உற்று நோக்குபவர்களுக்கு தெரியும், சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதி என்பவர் கடவுளை போல மதிக்கப்படுபவர் என்பது. ஆனால், சக நீதிபதிகள் இன்று அந்த பதவியில் இருப்பவருக்கு எதிராக பொது வெளியில் கருத்து கூறியுள்ளனர்.
ஆரம்பித்த கர்ணன்
நீதிபதி கர்ணன், நீதித்துறையில் நடைபெற்றதாக கூறப்படும், முறைகேடுகளை செய்தியாளர்களை சந்தித்து பேசி சிக்கலில் சிக்கினார். நீதிமன்றம் அவரை கடுமையாக ஒடுக்கியது. சிறையில் அடைக்கப்பட்ட கர்ணன் சில நாட்கள் முன்புதான் விடுதலையானார். ஆனால், இதே அதிருப்திக் குரல் இப்போது சுப்ரீம் கோர்ட்டிலும், வெளிப்பட்டுள்ளது.
என்றோ வர வேண்டியது
ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் இதுபற்றி டிவி சேனல் ஒன்றிடம் அளித்த பேட்டியில், "மக்களுக்கும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்கள் இருந்து வருகின்றன. ஓய்வு பெற்ற நீதிபதிகள் அமைப்பிலும் இதுகுறித்தெல்லாம் நாங்கள் விவாதித்திருந்தோம். இப்போது, அது வெளிப்படையாக வந்துள்ளது. என்றோ வரவேண்டியது இப்போது வந்துள்ளது" என்றார்.
விமர்சனங்கள்
உலக அளவில் புகழ்பெற்ற இந்திய நீதித்துறை பற்றி மக்களுக்கு நல்ல அபிப்ராயம் உள்ளது. அதை சீர்கெடுப்பதை போல இந்த பேட்டி அமைந்துவிடாதா என்ற கேள்விக்கு "மக்களுக்கும் நீதித்துறை மீது விமர்சனங்கள் இருந்து கொண்டேதான் உள்ளன. 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ததே தவறு என்றுதான் நான் கூறுவேன். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் அந்த வழக்கில், பல டெலிகாம் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்த பிறகு, கீழமை நீதிமன்றம், தவறு ஏதும் நடந்த ஆதாரம் இல்லை என கூறி விடுதலை செய்ததே" என கூறினார் அவர்.
மாற்றங்கள் வருமா
பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற தயக்கம் இருந்தது. அதை இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நால்வரும் உடைத்தெறிந்துள்ளனர். இந்த நிலையை நீதித்துறை உடனடியாக சீர் செய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நடைமுறை குறைகளை களைந்து, இந்திய நீதித்துறை மீண்டும் தனது கொடியை பட்டொளி வீசி பறக்கவிட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.