ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும்.. பான் கி மூனுக்கு மோடி கடிதம்
நியூயார்க் : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.
வருகிற 25-ந் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில் 150 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 70-வது பொதுச் சபை கூட்டம் பொதுச் செயலாளர் பான் கி மூன் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில், போப் ஆண்டவர் பிரான்சிசும் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் மோடி ஆகியோரும் உரையாற்றுகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
2015-ம் ஆண்டுக்கு பிறகான வளர்ச்சி குறித்த நிகழ்ச்சி நிரலில் ஐ.நா.விடம் நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம், பாதுகாப்பு சூழலை உறுதி செய்வது தொடர்பான சீர்திருத்தங்கள் பொருத்தமானவையாகவும், ஆக்கப்பூர்வமானவையாகவும் இருக்கவேண்டும் என்பதுதான்.
குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவற்றை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதையும் உறுதிசெய்யவேண்டும். நம் முன்பாக எத்தனையோ கடினமான பணிகள் இருந்தாலும் கூட இந்த ஒன்று மிகவும் அவசரமான மற்றும் முக்கியமான ஒன்றாகும்.
தற்போதுள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சூழல்நிலைக்கு ஏற்ப உருவான ஒன்று. அது 21-ம் நூற்றாண்டின் எதார்த்த நிலைகளையும், தேவைகளையும் வெளிபடுத்துவதாக அமையவேண்டும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகமும், உலக பொருளாதாரத்தில் முக்கியமாக திகழும் மற்றும் அனைத்து பெரிய கண்டங்களில் இருந்தும் குரல்களை ஒலிப்பதை அடங்கியதாக, பெரும் நம்பிக்கைக்கு உரியதாக, சட்டப்படியானதாக அமையவேண்டும்.
அந்த சபை அதிக பிரதிநிதி நாடுகள் கொண்டதாகவும், பயன் தரத்தக்கதாகவும் இருக்கவேண்டும். இதில் இந்தியாவும் நிரந்தர இடம் பெறவேண்டும். சீர்திருத்தங்களை குறிப்பிட்ட கால வரையறைக்குள் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 23-ந் தேதி நியூயார்க் செல்லும் பிரதமர் மோடி, 26 மற்றும் 27-ந் தேதிகளில் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு செல்கிறார். பின்பு 28-ந் தேதி நியூயார்க் திரும்பும் அவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து இரு நாடுகள் இடையேயான உறவு குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்பு ஐ.நா. சபையில் நடைபெறும் பொது விவாதத்திலும் மோடி பங்கேற்கிறார்.
அமைதி, பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம், தீவிரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு மோடி தனது உரையில் முக்கியத்துவம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.