தலித் வீட்டுச் சாப்பாட்டை ஒதுக்கிய பாஜக எதியூரப்பா- போலீசில் 'தீண்டாமை' புகார்!
தலித் வீட்டில் சாப்பிடாமல் ஹோட்டலில் இருந்து வாங்கிவந்த உணவை முன்னாள் கர்நாடக முதல்வர் எதியூரப்பா சாப்பிட்டார் என்று புகார் எழுந்துள்ளது.
பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் அம்மாநில பா.ஜ.க. தலைவருமான எதியூரப்பா மீது தீண்டாமை புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசில் தலித் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் அம்மனுவில், ' சித்ரதுர்கா மாவட்டம் கேலகோடே பகுதியில் உள்ள ஒரு தலித் குடும்பத்திற்கு எதியூரப்பா வருகை தந்திருந்தார். அப்போது ஊடகங்கள் முன்னிலையில் தலித் குடும்பத்துடன் மதிய உணவு சாப்பிட்டார்.
ஆனால், எதியூரப்பா உண்ட உணவு தலித் குடும்பத்தினரால் தயார் செய்யப்பட்டது அல்ல. ஹோட்டலில் இருந்து வாங்கி வந்தது. பா.ஜ.க. தலைவரின் இந்தச் செயல், சமூகத்திற்கு தவறான முன் உதாரணத்தை உருவாக்கிவிடும் ' என்று குறிப்பிட்டுள்ளார்.
எதியூரப்பா மீதான இந்த குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் அவரின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், எதியூரப்பா மீதான குற்றச்சாட்டு முற்றிலும் அரசியல் காரணமாக எழுந்துள்ளது என்று கர்நாடக பா.ஜ.கவினர் தெரிவித்துள்ளனர்.