ஓடும் வாகனத்தில் சில்மிஷம்... பயத்தில் கீழே குதித்த 3 பெண்கள் காயம்.. டிரைவர் கைது!
முசாபர்நகர்: டிரைவரின் சில்மிஷம் தாங்காமல் ஓடும் வாகனத்தில் இருந்து மூன்று பெண்கள் கீழே குதித்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் பஹ்ரா கிராமத்தைச் சேர்ந்த பிரவீண், சோனியா மற்றும் மோனி ஆகிய மூன்று பெண்கள் சாலை ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாகனம் ஒன்று வரவே, அதில் லிப்ட் கேட்டுப் பயணம் செய்துள்ளனர்.
வண்டி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அந்த வண்டியின் டிரைவர் மூன்று பெண்களிடமும் சில்மிஷம் செய்துள்ளார். டிரைவரின் அத்துமீறலைத் தாங்க முடியாத பெண்கள், வண்டியை நிறுத்தும்படி கூறியுள்ளனர்.
ஆனால், டிரைவர் வண்டியை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் பீதியடைந்த அந்த மூன்று பெண்களும் ஓடும் வாகனத்தில் இருந்து கீழே குதித்துள்ளனர்.
இதில், பலத்த காயமடைந்த அந்த மூன்று பெண்களையும் அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஓடும் வாகனத்தில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அந்த டிரைவரைக் கைது செய்துள்ளனர்.