உ.பி.யில் 15 வருடங்களுக்கு பிறகு பாஜகவுக்கு வெற்றி! இறங்கிய வாக்கு வங்கியில் திடீர் எழுச்சி
லோக்சபா தேர்தலில் உ.பியை வளைத்து வளைத்து வென்றது பாஜக. இப்போது அதே வேகம் சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்து பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது.
டெல்லி: 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் உத்தர பிரதேசத்தில் தாமரை மலர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் வீழ்ச்சியை நோக்கி சரிந்து கொண்டிருந்த பாஜக வீறு கொண்டு எழுந்து அடித்ததை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
2002ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக 88 தொகுதிகளை மட்டுமே வென்றதால் ஆட்சியை இழந்தது. முதல்வராக இருந்த ராஜ்நாத்சிங் ராஜினாமா செய்தார். அப்போது கட்சிக்கு 20 சதவீத வாக்குகள் இருந்தன.
2012ம் ஆண்டு அதாவது இதற்கு முந்தைய சட்டசபை பொதுத் தேர்தலில் பாஜக இன்னும் மோசமான நிலைக்கு போனது. 47 சீட்டுகளை மட்டுமே வென்ற அக்கட்சி 15 சதவீத வாக்குகளைத்தான் பெற முடிந்தது. தனிப்பெரும்பான்மையோடு அக்கட்சி ஆட்சியை பிடிப்பதெல்லாம் கனவுதான் என நினைத்திருந்த நேரத்தில்தான், மோடியின் வருகை களத்தை மாற்றியது.
லோக்சபா தேர்தலில் உ.பியை வளைத்து வளைத்து வென்றது பாஜக. இப்போது அதே வேகம் சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்து பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இதன்மூலம், 15 வருடங்களுக்கு பிறகு பாஜக ஆட்சி உ.பியில் மலருகிறது.