பொதுத்தேர்வில் கெஞ்சி, மிரட்டி, பணம் தந்து பாஸாகத் துடிக்கும் பள்ளி மாணவர்கள்.. இது உ.பி. அவலம்!
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற உத்தரப்பிரதேசத்தில் பல மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
முஸாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களில் மாணவர்கள் பலர் சொந்தக்கதைகளை எழுதி, தங்களை தேர்ச்சியடையச் செய்யும்படி கெஞ்சியும், மிரட்டியும் பணம் வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்தாண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் சுமார் 248 தேர்வு மையங்களில் எழுதிய 5.5 கோடி விடைத்தாள்களைத் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இவற்றில் 60 லட்சம் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு விட்டன. இந்தப் பணியில் சுமார் 1.46 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
இம்மாத மூன்றாம் வாரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட அம்மாநில பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. எனவே, விடைத்தாள்களை விரைவாக திருத்தி முடிக்கும்பணி முடுக்கிவிடப் பட்டுள்ளது.
இந்நிலையில், விடைத்தாள்களைத் திருத்தும் பணியில் இருப்போர் பல திடுக்கிடும் மாணவர்களின் செயல்களை அம்பலப்படுத்தியுள்ளனர். படிக்க வேண்டிய வயதில் ஒழுங்காக படிக்காமல், தன் கடமையைச் செய்யாமல் குறுக்கு வழியில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என மாணவர்கள் பலர் நினைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு உரிய விடைகளை எழுதாமல், அதற்கு மாறாக தங்களது சோகக்கதைகளை, தற்கொலை மிரட்டல்களை மற்றும் கொலை மிரட்டலை பதிலாக மாணவர்கள் பலர் எழுதியுள்ளனராம்.
சிலர் இதிலிருந்து வேறுபட்டு, விடைத்தாள்களின் இடையில் பணத்தை லஞ்சமாக வைத்து, தன்னை எப்படியும் பாஸ் செய்து விடும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளனராம்.
இது தொடர்பாக முஸாபர்நகர் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முனீஷ்குமார் கூறுகையில், “பல இடங்களில் விடைத்தாள்களில் ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டிருந்தது உண்மை தான். கூடவே, 'எனக்கு அம்மா இல்லை, இந்தத் தேர்வில் நான் தோல்வி அடைந்தால் என் அப்பா என்னைக் கொன்று விடுவார்’, 'நான் பூஜாவைக் காதலிப்பதால் என்னால் தேர்வுக்கு ஒழுங்காகப் படிக்க இயலவில்லை. ப்ளீஸ் என்னை பாஸ் செய்து விடுங்கள்’, 'இந்தத் தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை’ என்பது போன்ற குறிப்புகளையும் மாணவர்கள் எழுதி வைத்துள்ளனர்.
ஒரு சிலரோ மாணவர்களோ, 'என்னை இந்தத் தேர்வில் பாஸ் செய்யவில்லை என்றால், இதைத் திருத்தும் உங்களைக் கொன்று விடுவேன்’ என மிரட்டும் தொனியிலும் எழுதி வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவர்களின் விடைத்தாள்களில் இந்த ஒரு சில வரிகளைத் தவிர மற்ற அனைத்து பக்கங்களும் காலியாகவே உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
'முயற்சி செய்யாமல், தன் கடமையை ஒழுங்காகச் செய்யாமல், படிக்க வேண்டிய காலத்தில் படிக்காமல் இப்படி குறுக்கு வழியில் மாணவர்கள் வெற்றி பெறத் துடிப்பது வேதனையளிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். அப்போது தான் எதிர்கால சமுதாயம் ஆரோக்கியமானதாக அமையும்’ என கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.