உ.பி. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: 2 மாநகராட்சிகளை கைப்பற்றியது பகுஜன் சமாஜ்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சி தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி 2 மாநகராட்சிகளைக் கைப்பற்றி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக பெற்ற விஸ்வரூப வெற்றியைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பகுஜன் சமாஜ் கட்சியும் வியூகங்களை மாற்றி வகுத்தது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் 3 கட்டங்களாக கடந்த மாதம் 22,26 மற்றும் 29 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை பகுஜன் சமாஜ் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 16 மாநகராட்சிகளில் 14 பாஜக வசமாகிறது. 4 மாநகராட்சிகளைக் கைப்பற்றியுள்ள பாஜக 10-ல் முன்னிலை வகிக்கிறது.
அலிகார், மீரட் மாநகராட்சிகளை பகுஜன் சமாஜ் கைப்பற்றியுள்ளது. தலித் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகள் அப்படியே பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைத்திருக்கிறது.
மொத்தம் உள்ள 652 உள்ளாட்சி இடங்களில் 340-ல் பாஜகவும் 117-ல் பகுஜன் சமாஜ் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன. சமாஜ்வாடி கட்சியோ 89 இடங்களிலும் காங்கிரஸ் வெறும் 19 இடங்களிலும்தான் முன்னிலை வகிக்கிறது.