வதந்திகளை நம்பாதீர்.. உப்பு தட்டுப்பாடு இல்லை.. அகிலேஷ் யாதவ் தகவல்
லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பரவிவரும் வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்று, அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இன்றே வாங்கி இருப்பு வைக்கவில்லை என்றால் இன்னும் சில மாதங்களுக்கு உப்பு கிடைக்காது எனவும் வதந்திகள் பரவின. இதனால் பீதியடைந்த மக்கள் உப்பு வாங்குவதற்காக கடைகளுக்கு படையெடுத்தனர்.
அடுத்த சில மணி நேரங்களிலேயே, உத்தரப்பிரதேசம் முழுவதும் உப்பின் விலை கிடுகிடுவென அதிகரிக்கத் தொடங்கியது. திடீர் தேவை காரணமாக, ரூ.200 வரை உப்பு விலையை நிர்ணயித்து, வியாபாரிகளும் விற்பனை செய்தனர்.
பல இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று, போட்டி போட்டு கடைகளில் உப்பு வாங்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதுமே விரைவில் உப்புத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் வதந்திகள் சூடுபிடித்தன. உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் லக்னோ, அலகாபாத், மொரதாபாத் ஆகிய இடங்களில் அதிக விலைக்கு உப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுபற்றி மத்திய அரசு மறுப்பு தெரிவித்துவருகிறது. வட மாநிலங்களில் உப்பு தட்டுப்பாடு ஏதும் இல்லை எனவும், உப்பு விலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார். மேலும், வதந்தி பரப்புவோர் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேபோன்று, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தற்போது மறுப்பு தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உத்தரப்பிரதேசத்தில் போதிய உப்பு கையிருப்பில் உள்ளதென்றும், பற்றாக்குறை ஏற்பட்டால் உடனே கொள்முதல் செய்து, விநியோகிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, உப்புக்குத் தட்டுப்பாடு எனப் பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், உப்பின் விலை எப்போதும் போல இயல்பாகவே நீடிக்கும் என்றும் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாநில தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ள அகிலேஷ், இத்தகைய வதந்தியை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
ஏற்கனவே 500, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்ததால் சில்லறைக்காக தடுமாறி வரும் நிலையில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகிவிட்டனர். விடிய விடிய தூங்காமல் தவித்தனர்.