லிப்ட்டுக்குள் அரை மணி நேரம் சிக்கிக் கொண்ட அகிலேஷ் யாதவும், அவரது மனைவியும்!
லக்னோ: சட்டசபை லிப்டில் உத்திரப்பிரதேச முதல்வரும், அவரது மனைவியும் சுமார் 30 நிமிடங்கள் சிக்கிக் கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் பாதுகாப்பாக லிப்டில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.
உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அகிலேஷுடன் அவரது மனைவியும், எம்.பி,யுமான டிம்பிள் யாதவும் வந்திருந்தார்.
அமைச்சரவைக் கூட்டம் முடிந்து இருவரும் விஐபிக்களுக்கான லிப்டில் ஏறி கீழே இறங்க முயற்சித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்களது லிப்ட் பாதியில் நின்றது. இதனால், லிப்டிற்குள் அகிலேஷும், அவரது மனைவியும் சிக்கிக் கொண்டனர்.
30 நிமிடங்கள்...
இதனால் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதற்றம் அடைந்தனர். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர் இருவரும் பாதுகாப்பாக லிப்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சுமார் 30 நிமிடங்கள் இருவரும் லிப்டில் சிக்கி இருந்தனர்.
தொழில்நுட்பக் கோளாறு...
இந்த சம்பவத்திற்கு தொழில்நுட்பக் கோளாறு தான் காரணமாகக் கூறப்படுகிறது. லிப்டை சரிவரப் பராமரிக்காத ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரபரப்பு...
முதல்வரும், அவரது மனைவியும் லிப்டில் மாட்டிக் கொண்டதால் அங்கு சிறிது பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் இருவரும் பாதுகாப்பாக லிப்டில் இருந்து வெளியேறிய பின்னரே அங்கிருந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
கடவுள் அருளாள்...
பின்னர் இதுகுறித்து டிவிட் போட்ட அகிலேஷ், "சட்டசபை லிப்ட்டுக்குள் சிறிது நேரம் சிக்கிக் கொண்டோம். கடவுள் அருளால் இப்போது பத்திரமாக உள்ளோம். நன்றாக உள்ளோம்" என்று கூறியிருந்தார்.