உ.பி முதல்வர் யோகியின் செயல் முட்டாள்தனமானது... பத்திரிக்கையாளர் கைதுக்கு ராகுல் கண்டனம்!
டெல்லி: உத்தரபிரதேசத்தில் பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு வீடியோவை பரப்பியதாக கூறி, பிரசாந்த் கனோஜியா உள்ளிட்ட மூன்று பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை 11 நாள் நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு லக்ணோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், அவரது கைது சட்டவிரோதமானது என்று கூறி, கனோஜியாவின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஏற்றுக்கெண்டது. இதையடுத்து, இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்டோகி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது.
விசாரணை முடிவில் நீதிபதிகள் கூறியதாவது: நாட்டில் கருத்து சொல்வதற்கு சுதந்திரம் உள்ளது. ஒரு கருத்தை வெளியிட்டதற்காக நிருபர்களை கைது செய்தது தவறு. அவர் செய்தது கொலைக்குற்றமா என்ன? அவர் சிறையில் அடைக்கப்பட்டது தவறானது என்று தெரிவித்தனர். மேலும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் தனது பதிவில்," என் மீது பொய் செய்திகளையும், விஷமத்தனமான பதிவுகளையும் பரப்பி வரும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆதரவு பத்திரிக்கையாளர்களை பிடித்து சிறையில் போட்டால், செய்தி தொலைக்காட்சிகளில் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செயல் முட்டாள்தனமானது. கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
உத்தரபிரதேச முதல்வர் அலுவலகத்திற்கு வந்த பெண் ஒருவர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்ய விரும்புவதாக பேட்டி கொடுத்தார். இதுதொடர்பாக, முதல்வரிடமும் தெரிவித்திருப்பதாக அவர் கூறினார்.
இந்த வீடியோவை கனோஜி உள்ளிட்ட நிருபர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். அவர்களை உடனடியாக பிடித்து சிறையில் அடைத்தது உ.பி.அரசு. இதுதான் அங்கு பூதாகரமான விஷயமாக மாறி இருக்கிறது.