லோக்சபா தேர்தலில் படுதோல்வி... உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் ராஜினாமா
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளதற்கு பொறுப்பேற்று அம்மாநில தலைவர் ராஜ் பப்பர் ராஜினாமா செய்துள்ளார்.
நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம். பிரதமரை தேர்வு செய்யும் வாய்ப்பை இந்த மாநிலம் வழங்குவதால் தேசிய கட்சிகளுக்கு உத்தரபிரதேசம் மிக முக்கியமானதாக இருக்கிறது.
இந்த நிலையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுவும் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதி மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது.
ஆனால், பாஜக கூட்டணியானது உத்தரபிரதேசத்தில் 64 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி 15 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த படுதோல்விக்கு பொறுப்பேற்று மாநிலத் தலைவர் ராஜ் பப்பர் ராஜினாமா செய்துள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பக்ஷி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜ் பப்பரின் ராஜினாமாவை ஏற்பது குறித்து காங்கிரஸ் தலைமை விரைவில் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வேதனை அளிப்பதாகவும், பொறுப்பை உரிய முறையில் செய்ய தவறி விட்டதாக அவர் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
தமிழகத்தில் ரெண்டு பேருக்கு ஒருத்தர் ஓட்டு போட்டது திமுக கூட்டணிக்குதான்.. அசரடிக்கும் புள்ளி விவரம்
இதனிடையே, காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நாளை நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.