என்ன டாக்டரே இப்படி கையெழுத்து போட்டா எப்படி.. இந்தா பிடிங்க ஃபைன்!
டாக்டர்கள் கையெழுத்து புரியாததால் அபராதம் விதிக்கப்பட்டது.
லக்னோ: "இதெல்லாம் ஒரு கையெழுத்தா? இப்படித்தான் ஒன்னுமே புரியாமல் கிறுக்கி வைப்பதா" என்று செம டோஸ் விழுந்திருக்கிறது. யாருக்கு தெரியுமா புகழ்பெற்ற டாக்டர்களுக்கு!! எங்கிருந்து தெரியுமா நீதிபதிகளிடமிருந்து!!
உத்திரபிரதேசம் மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. அது 3 டாக்டர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு. இதனை அமர்வு ஒன்று விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மருத்துவர்கள் தங்கள் சம்பந்தப்பட்ட விளக்கங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.
மண்டை காய்ந்த நீதிபதிகள்
அதனை எடுத்து படித்த நீதிபதிகள் கடுப்பாகி விட்டார்கள். டாக்டர்கள் எழுதியது ஒன்றுமே அவர்களுக்கு புரியவில்லையாம். எத்தனையோ முறை முயற்சி செய்து எழுதியதை திரும்ப திரும்ப படித்தும், எதுவுமே புரியாமல் மண்டை காய்ந்துள்ளனர். என்ன விளக்கத்தை எழுதி வைத்திருக்கிறார்கள் என்று தெரியாமல் மேற்கொண்டு வழக்கையும் நடத்த முடியாமல் திணறிவிட்டனர்.
நேரத்தை வீணடிப்பதா?
இதனால் டாக்டர்களை நீதிபதிகள் கடிந்து கொண்டார்கள். "இப்படி கிறுக்கி எழுதி எங்களை நேரத்தை வீணடிப்பதா?" என்று என கேள்வி எழுப்பினர். அதோடு கிறுக்கி தள்ளிய டாக்டர்களுக்கு சம்மனும் அனுப்ப உத்தரவிட்டனர்.
பணிச்சுமைதான் காரணம்
இதையடுத்து சம்பந்தப்பட்ட சம்மன் டாக்டர்கள் ஆஜரானார்கள். ஏன் இப்படி கிறுக்கி எழுதி வைத்திருக்கிறீர்கள் என்று நீதிபதிகள் அவர்களிடம் கேள்வி எழுப்ப, அதற்கு டாக்டர்களோ, "எங்களுக்கு பணிசுமை அதிகமாகி விட்டது அதனால் இப்படி வேகமாக எழுதவேண்டியதா போச்சு" என்று விளக்கம் அளித்தனர். இதெல்லாம் ஒரு காரணமா என்று கேட்ட நீதிபதிகள் டாக்டர்கள் ஒவ்வொருக்கும் தனித்தனியாக 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
எழுதப்படாத விதி
யாருக்கும் எதுவும் புரியாமல் எழுதுவதுதான் டாக்டர்களின் எழுதப்படாத விதி போலும். மருந்து சீட்டில் டாக்டர் எழுதியது, கிளினிக் பக்கத்துலேயே கடை வைத்திருக்கும் மருந்து கடைக்காரனுக்கு மட்டும் எப்படித்தான் புரியுமோ.. அதுமட்டும் நமக்கு விளங்கவே இல்லை!!