இமயத்தை எட்டும் பெட்ரோல்- டீசல் விலை.. 4 மாநில நிதியமைச்சர்கள் நாளை கூடி ஆலோசனை!
டெல்லி: நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த 4 மாநில நிதி அமைச்சர்கள் நாளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை கடந்த ஜூன் மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து கச்சா எண்ணெய் விலை, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் கடந்த 50 தினங்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்து வருகிறது.
இப்படியே போனால் இன்னும் சிறிது நாளில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100-ஐ தொடும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள் செஸ் வரி உள்ளிட்ட ஏதோ ஒரு வகையில் விலையை குறைத்துள்ளன. தமிழ்நாடு குறைக்க முடியாது என்பதை ஏற்கனவே கூறி விட்டது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் நாளை சண்டிகரில் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான வாட் வரியை குறைக்க முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த 4 மாநிலங்களும் அருகருகே உள்ள மாநிலங்கள். எனவே இங்கு மொத்தமாக வாட் வரி குறைக்கப்பட்டால், நான்கு மாநில மக்களுக்கும் பெரும் பலன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. உண்மையில் இது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதேபோல தென் மாநிலங்கள், மேற்கு மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள் என ஒவ்வொரு பிராந்தியமும் கூடி இதுபோல முடிவெடுத்தால் மொத்த நாட்டு மக்களுக்கும் நன்மை கிடைக்கும். செய்வார்களா?