அமேதி அரண்மனையில் பயங்கர சண்டை... துப்பாக்கிச் சூட்டில் போலீஸ்காரர் பலி
அமேதி: அமேதியில் ராஜ குடும்பத்து வாரிசான காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் சிங்கின் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பயங்கர சண்டையில் ஒரு போலீஸ்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அமேதியில் இன்று பெரும் பரபரப்பு நிலவுகிறது.
சஞ்சய் சிங்கின் இரு மனைவியரின் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த சண்டையால் அமேதியே இன்று நாறிப் போனது.
அமேதியில் உள்ள ராஜ குடும்பத்து அரண்மனையான பூபதி பவனில் இன்று இந்தச் சம்பவம் நடந்தது.
2 மனைவி
காங்கிரஸ் எம்.பியாக உள்ள சஞ்சய் சிங்குக்கு மொத்தம் 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் கரீமா சிங். 2வது மனைவி பெயர் அமீதா.
2வது மனைவியுடன் வந்த சஞ்சய் சிங்
இன்று பூபதி பவனுக்கு தனது 2வது மனைவி அமீதாவுடன் வந்தார் சஞ்சய் சிங். இதற்கு முதல் மனைவி கரீமாவின் மகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தடுத்து நிறுத்திய மகன்
சஞ்சய் சிங்கையும், அமீதாவையும் தடுத்து நிறுத்திய அவர் உள்ளே வரக் கூடாது என்று கூறி சத்தம் போட்டார். அவருக்கு ஆதரவாக முதல் மனைவியின் ஆதரவாளர்கள், பாதுகாவலர்கள் திரண்டனர்.
அரண்மனை வளாகத்தில் அடிதடி - துப்பாக்கிச் சூடு
அதேபோல அமீதாவின் ஆதரவாளர்களும் அங்கு வந்தனர். இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இரு தரப்பும் கை கலப்பில் குதித்தது. சரமாரியாக அடித்துக் கொண்டனர்.
போலீஸார் வருகை
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். கலவரத்தைத் தடுக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
போலீஸ்காரர் பலி
இந்த மோதலின்போது ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு போலீஸ்காரர் படுகாயமடைந்து பின்னர் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மகன் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து சஞ்சய் சிங்கின் முதல் மனைவிக்குப் பிறந்தவரான விக்ரம் கூறுகையில், நாங்கள் கிட்டத்தட்ட வீட்டுக் காவலில் உள்ளது போல இருக்கிறோம். எங்களை அவர்கள் மிரட்டுகிறார்கள். உள்ளே வந்து தாக்குவோம் என்கிறார்கள். நாங்கள் மகாராஜாவை தடுக்கவில்லை. இது அவரது அரண்மனை. அவரது இடம். இங்கே அவர் தாராளமாக வரலாம், அவருக்கு உரிமையானது இது. நாங்கள் அதைத் தடுக்கப் போவதில்லை என்றார் விக்ரம்.
வீட்டுக்குள் ஓடிப் பதுங்கிய சஞ்சய் சிங்
கலவரத்தின்போது சஞ்சய் சிங் தனது அரண்மனைக்குள் புகுந்து தப்பினார்.