உ.பி. ரவுடி விகாஸ் துபே என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை-போலீசிடம் இருந்த தப்பியதால் துப்பாக்கிச் சூடு!
கான்பூர்: மத்திய பிரதேசத்தில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்கு செல்லும் வழியில் போலீசார் வாகனத்தில் இருந்து தப்ப முயன்ற ரவுடி விகாஸ் துபே என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரப்பிரதேசம் கான்பூரில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடி விகாஸ் துபேவை கைது செய்ய போலீசார் சென்றனர். ஆனால் போலீசார் 8 பேரை ரவுடி விகாஸ் துபே கும்பல் சுட்டுக் கொன்றது.
இதனையடுத்து ரவுடி விகாஸ் துபே கும்பலை கூண்டோடு கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக போலீசிடம் இருந்து தப்ப முயன்ற விகாஸ் துபேவின் கூட்டாளிகள் 2 பேர் நேற்று போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் நேற்று விகாஸ் துபே சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அங்கிருந்து உத்தரப்பிரதேசத்துக்கு கார் மூலமாக விகாஸ் துபேவை போலீசார் அழைத்து வந்தனர்.
விகாஸ் துபேவை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் கான்பூர் அருகே விபத்துக்குள்ளானது. இதனை பயன்படுத்தி விகாஸ் துபே தப்ப முயன்றுள்ளார்.
Kanpur: One of the vehicles of the convoy of Uttar Pradesh Special Task Force (STF) that was bringing back #VikasDubey from Madhya Pradesh to Kanpur overturns. Police at the spot. More details awaited. pic.twitter.com/ui58XBbd82
— ANI UP (@ANINewsUP) July 10, 2020
இதனால் போலீசார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி மடக்க முயன்றனர். இதில் விகாஸ் துபே படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு விகாஸ் துபே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் பெரும் சவாலாக இருந்த விகாஸ் துபே என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை அம்மாநில போலீசார் உறுதி செய்துள்ளனர்.