உ.பி: கோரக்பூர் டாக்டர்.கபீல் கானின் தம்பி மீது சரமாரி துப்பாக்கி சூடு.. மர்ம நபர்கள் தாக்குதல்
உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு பெயிலில் வெளியாகி இருக்கும் டாக்டர் கபீல் கானின் சகோதரர் தற்போது மர்ம நபர்களால் மோசமாக தாக்கப்பட்டு
Recommended Video
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு பெயிலில் வெளியாகி இருக்கும் டாக்டர் கபீல் கானின் சகோதரர் தற்போது மர்ம நபர்களால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் இருக்கும் பிஆர்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சென்ற ஆண்டு மிக மோசமான சம்பவம் ஒன்று நடந்தது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 70 குழந்தைகள் மரணமடைந்தனர்.
உத்தர பிரதேச அரசு ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு பணம் அளிக்காததால் சிலிண்டர் வழங்குவதை அந்நிறுவனம் நிறுத்தியது. இதை வெளியே தெரியபடுத்தியவர், டாக்டர் கபீல் கான். அவர்தான் தனது சொந்த காசில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி பல குழந்தைகளை காப்பாற்றினார்.
ஆனால் அரசின் தவறை வெளியே கொண்டு வந்ததால் அவர் கைது செய்யப்பட்டார் . பின் 8 மாதம் சிறையில் இருந்துவிட்டு, சென்ற ஏப்ரல் மாதம்தான் அவர் வெளியே வந்தார். தற்போது இவரது தம்பி மர்மநபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.
35 வயது நிரம்பிய அவரது தம்பி காசிப் ஜமீல் நேற்று இரவு துப்பாக்கியால் சுடப்பட்டார். மொத்தம் நான்கு தடவை அவர் சரமாரியாக சுடப்பட்டுள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தற்போது நான்கு குண்டுகளும் நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. யார் இந்த செயலை செய்தது என்று இன்னும் விவரம் வெளியாகவில்லை.