என்ன செய்யலாம் இந்த அகிலேஷ் யாதவை? அமிதாப் குடும்பத்துக்கு மாதம் ரூ.50,000 பென்சனாம்!
லக்னோ: நடிகர் அமிதாப் பச்சன் அவரது மனைவி ஜெயா, மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு மாதம் தலா, ரூ.50 ஆயிரம் பென்சன் வழங்கப்படும் என்று சமாஜ்வாதி ஆளும் உத்தர பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பணம் ஏழைகளுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ள அமிதாப்பச்சன், அறக்கட்டளையொன்றுக்கு தனக்கு தர உள்ள பென்சன் பணத்தை வழங்கிவிடுமாறு அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
மாதம் ரூ.50 ஆயிரம்
'யஷ் பாரதி' என்ற பெயரில் உ.பி அரசு விருதுகளை வழங்கிவருகிறது. அந்த விருது பரிசுத்தொகையில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான தற்போதைய சமாஜ்வாதி அரசு சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, ரூ.5 லட்சமாக இருந்த ரொக்கப் பரிசை ரூ.11 லட்சமாக உயர்த்தியதோடு, மாதந்தோறும், ரூ.50 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பச்சன் குடும்பம்
இந்த விருதை பெறும் முதல் நபர்களாக நடிகர் அமிதாப்பச்சன், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு மாதம் தலா ரூ.50 ஆயிரம் பென்சன் கிடைக்கும். நாட்டிலேயே ஒரு பென்சன் திட்டத்தில் வழங்கப்படும் அதிகபட்ச தொகை இது.
பிற ஓய்வூதியங்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு தலா ரூ.300 மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. சொற்ப அளவிலுள்ள, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கே மாதம் ரூ.20129தான் ஓய்வூதியம். அந்தமான் சிறையில் வாடியவர்களுக்கு ரூ.23,309 மாத ஓய்வூதியம்.
பிசிசிஐ அமைப்பு, 100 போட்டிகளுக்கும் மேல் டெஸ்ட் ஆட்டங்களில் ஆடிய இந்திய வீரர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் அளித்துவருகிறது.
சர்ச்சை
ஒரு அரசு அளிக்கும் அதிகபட்ச ஓய்வூதியம், இது என்கிறவகையில், அகிலேஷ் யாதவின் ஆட்சி சாதனை படைத்துள்ளது. ஆனால், பெரும் செல்வந்தராக உள்ள ஒரு நடிகர் குடும்பத்திற்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
எனக்கு வேண்டாம்
இதனிடையே அமிதாப்பச்சன் கூறியதாவது: நான் மிகுந்த மரியாதையோடு உ.பி அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். எனக்கு தருவதாக நீங்கள் அறிவித்துள்ள அந்த தொகையை ஏதாவது ஒரு ஏழைக்குழந்தைகள் நலன் காக்கும் தொண்டு அமைப்பிற்கு மாதாமாதம் தந்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.