மதுரா வன்முறைக்கு உத்தரப்பிரதேச அரசே காரணம்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
டெல்லி: மதுரா வன்முறைக்கு உத்தரப்பிரதேச அரசே காரணம் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ஜவஹர் பாக் பகுதியில் உள்ள பூங்காவை ஸ்வாதீன் பாரத் சுபாஷ் சேனா என்ற அமைப்பை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தர்ணா நடத்துவதாக பொய் கூறி ஆக்கிரமித்தனர். 260 ஏக்கர் நிலப்பரப்பிலான இந்த பூங்காவை ஆக்கிரமிப்பாளர்கள் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக ஆக்கிரமித்து தங்கியுள்ளனர்.
இதனிடையே நேற்று ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற மாவட்ட அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் களம் இறங்கினர். போலீஸார் பூங்காவில் தங்கியிருந்தவர்களை வெளியேறுமாறு கூறியபோது அவர்கள் திடீரென தாக்குதலில் இறங்கினர்.
இதனால் போலீசாருக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் மூண்டது. மோதலை கண்டுக்குள் கொண்டுவர போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 24 பேர் கொல்லப்பட்டனர். போலீஸ் தரப்பில் எஸ்.பி. உள்பட 2 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில், மதுரா வன்முறைக்கு உத்தரப்பிரதேச அரசே காரணம் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரிஜிஜு, இந்த பிரச்சினையை கையாள்வதில் பல குறைபாடுகள் இருந்துள்ளது. துரதிருஷ்டவசமான இந்த சம்பவம் பெரும் கவலைக்குரியது. அங்கு நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, உத்தரப்பிரதேச மாநில முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவை தொடர்பு கொண்டு பேசிய ராஜ்நாத் சிங், அங்குள்ள நிலமை குறித்து கேட்டறிந்தார். இந்த சம்பவம் குறித்து முழு அறிக்கை அளிக்குமாறும் உத்தரப்பிரதேச அரசை உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.