மேகியைத் தொடர்ந்து சர்ச்சையின் பிடியில் “நெஸ்லே பாஸ்தா” - லெட் அளவு ஜாஸ்தியாய் இருக்காம்!
மாவ்: நெஸ்லே நிறுவனத்தின் மேகி தொடர்பான சர்ச்சைகள் அடங்கி அது மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் தற்போது அதன் பாஸ்தாவில் ரசாயன அளவு அதிகளவில் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக அளவு ரசாயன பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டது. மேலும், நெஸ்லே நிறுவனம் மீது வழக்கும் தொடரப்பட்டது.
மீண்டும் விற்பனை துவக்கம்:
இதைதொடர்ந்து மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உரிய ஆய்வகங்களில் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்று தரச்சான்று பெற்ற பின்னர் மீண்டும் நெஸ்லே இந்தியா நிறுவனம் மேகி நூடுல்ஸ் விற்பனையை துவங்கியுள்ளது.
பாஸ்தாவிற்கு சிக்கல்:
இந்த நிலையில் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான நெஸ்லே பாஸ்தாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ரசாயன பொருட்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உணவு தர பரிசோதனை:
உத்திர பிரதேசம் மாநிலத்தின் மாவ் பகுதியில் உள்ள விநியோகஸ்தர் ஒருவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட நெஸ்லே பாஸ்தா பாக்கெட்டுகள், அம்மாநில அரசுக்கு சொந்தமான உணவு தர பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
அதிகளவில் காரீயம்:
இந்த ஆய்வக பரிசோதனையின் முடிவில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட நெஸ்லே பாஸ்தாவில் ரசாயன பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட காரீயத்தின் அளவான 2.5 பிபிஎம் என்பதை விட பரிசோதிக்கப்பட்ட பாக்கெட்டுகளில் 6 பிபிஎம் இருப்பது தெரியவந்துள்ளது.
கடிதத்தை திருப்பி அனுப்பிய நெஸ்லே:
இது குறித்து நெஸ்லே நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட கடிதமும் அங்கு பெறப்படாமால் திருப்பி அனுப்பட்டுள்ளதாக ஆய்வக அதிகாரி அரவிந்த் யாதவ் என்பவர் தெரிவித்தார். மேலும், இந்த அறிக்கையின் அடிப்படையில் நெஸ்லே பாஸ்தா உணவு பாதுகாப்பானது அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
எல்லாமே பாதுகாப்பானதுதான்:
இதற்கிடையே, தங்கள் நிறுவனத்தின் அனைத்து உற்பத்தி பொருட்களும் உண்பதற்கு பாதுகாப்பானது என்று நெஸ்லே இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.