உ.பி. வக்கீலை அடித்ததாக மேனகா காந்தி மீது புகார்: போலீஸ் விசாரணை
டெல்லி: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா வக்கீல் ஒருவரை அடித்ததாக உத்திரப்பிரதேசத்தில் புகார் ஒன்று அளிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் பிசால்பூர் ரோட்டை சேர்ந்தவர் வக்கீல் டி.கே வர்மா. இவர் மாவட்ட போலீஸ் அதிகாரியிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-
பர்கேதா பகுதியில் எனது வீடு உள்ளது. இங்கு பா.ஜ., கட்சியை சேர்ந்த சிலர் வந்தனர். என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கொண்டு சென்றனர். இங்கு முகாமிட்டிருந்த மேனகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இங்கு மேனகா எனது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில் நிலைகுலைந்து போனேன். பின்னர் அங்கிருந்து நான் தப்பித்து வந்தேன். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகார் தொடர்பாக மேனகா காந்தியின் சட்ட பிரதிநிதி அஸ்வின் அகர்வால், எஸ்.பி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘அமைச்சர் வக்கீலை அடித்ததாக் கூறப்படுவது பொய் என்றும், அவ்வாறு ஒரு சம்பவம் நடந்திருந்தால் அது யார் முன்னிலையில் என புகார் அளித்தவர் நிரூபிக்க முடியுமா?' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், தக்க ஆதாரங்கள் கிடைத்தால் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.