"ராக்கி” கட்டுவதாகக் கூறி தலித் மாணவியின் நெற்றியில் “குங்குமம்” வைத்த மாணவர்... ஆசிரியர் ஷாக்!
பிஜ்னோர், உ.பி.: உத்திரப்பிரதேசத்தில் வகுப்பறைக்குள் புகுந்து ராக்கி கட்டப் போவதாகக் கூறி ஏமாற்றி, மாணவிக்கு நெற்றியில் குங்குமம் வைத்து பரபரப்பு ஏற்படுத்திய மாணவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
உத்திரப்பிர்தேச மாநிலம், முர்லிவாலா கிராமத்தைச் சேர்ந்த சோனுகுமார் (18), கடந்தாண்டு பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்ததால் பள்ளி செல்வதை நிறுத்தினார். ஆனால், அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை சோனுகுமார் காதலித்து வந்துள்ளார். அம்மாணவி தலித் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சோனுவுடன் பேசுவதை அம்மாணவி நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சோனு, சம்பவத்தன்று அம்மாணவியின் வகுப்பறைக்குள் திடீரென நுழைந்துள்ளான். தடுத்த ஆசிரியரிடம், தலித் மாணவியின் கையில், 'ராக்கி' கயிற்றை காட்டி, 'சகோதரி' ஆக ஏற்றுக் கொள்ளப் போவதாக கூறியுள்ளான் சோனு. ஆசிரியரும் அவனை நம்பியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அம்மாணவியின் அருகில் சென்ற சோனு, யாரும் எதிர்பார்க்காத வேளையில் கையில் வைத்திருந்த குங்குமத்தை எடுத்து அம்மாணவியின் நெற்றியில் வைத்து, "நீயே என் மனைவி" எனக் கூறியுள்ளான்.
இதைக் கண்டு அங்கிருந்த ஆசிரியரும், மற்ற மாணவ, மாணவியரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் அதிர்ச்சி விலகுவதற்கு முன்னதாகவே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான் சோனு.
இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அத்துமீறி, மாணவிக்கு குங்குமம் வைத்ததாக சோனுவை, போலீசார் தேடி வருகின்றனர்.