பதான் சிறுமி பலாத்காரத்துக்கு அரசு பொறுப்பு அல்ல: உ.பி. பெண் அமைச்சர் பேச்சால் சர்ச்சை!
கான்பூர்: பதானில் போலீசாரால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு அரசு பொறுப்பு அல்ல சமூகமே பொறுப்பு என்று உத்தரப்பிரதேச பெண் அமைச்சர் அருணா கோரி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் ஒரு சிறுமியை வீர்பால்சிங் யாதவ், அவினிஷ் யாதவ் என்னும் 2 போலீசார் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக கான்பூரில் நேற்று மாநில பெண்கள் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அருணா கோரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பதான் மாவட்டத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு அரசு பொறுப்பாகாது. அதற்கு இந்த சமூகம்தான் பொறுப்பு ஆகும்.
எங்கேனும் மைனர் பெண்கள் தாக்குதலுக்கு ஆளாகி பலாத்காரம் செய்யப்பட்டால் உடனடியாக இது குறித்து புகார் செய்ய வேண்டும். அதன்மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
இது தொடர்பான தகவல் பெறப்பட்ட உடனேயே நாங்கள் விசாரணைக்கு உத்தரவிடுகிறோம். குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அதற்கு அரசுடன் சமூகமும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அருணா கோரி கூறினார்.
அருணா கோரியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் சுதிந்திரா பதோரியா கூறுகையில், இது அமைச்சரின் பொறுப்பற்ற கருத்து ஆகும். பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க உத்தரப்பிரதேச அரசால் இயலவில்லை. தங்களது கையாலாகாத தன்மையை மறைப்பதற்கு இத்தகைய கருத்துக்களை வெளியிடுகிறார்கள். சமூகத்தை குறிப்பாக பெண்களை காக்க முடியவில்லை என்றால் அவர்கள் பதவி விலகட்டும் என்றார்.
பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர் சாம்பித் பத்ரா, ஒரு பெண்ணுக்கு நேர்ந்துள்ள வலியை ஒரு பெண் அமைச்சரே புரிந்துகொள்ளவில்லை என்பது வேதனையானது. அவர் பொறுப்பை தட்டிக்கழிக்கிறார் என்றார்.