ரவுடி விகாஸ் துபே கூட்டாளி சுட்டுக் கொலை... பாஜக எம்எல்ஏவை சந்தித்த விகாஸ்.. என்ன நடக்கிறது உபியில்!
கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 போலீசாரை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபேவை சல்லடை போட்டு அந்த மாநில போலீசார் தேடி வருகின்றனர். இவருக்கு நெருங்கிய கூட்டாளியான அமர் துபேவை போலீசார் சுட்டுக் கொன்றனர். மேலும் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சினிமாவில்தான் ரவுடிகளின் அட்டாக்குகளை பார்த்து இருக்கிறோம். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் கடந்த வாரம் இந்தக் காட்சிகள் நேரடியாக அரங்கேறியது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், ஆங்கூரில் உறவினர் வீட்டில் பிரபல ரவுடி விகாஸ் துபே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரைப் பிடிக்க திட்டத்துடன் சென்ற போலீசாரை, ரவுடி விகாஸ் துபேயின் ஆட்கள் சுட்டுக் கொன்றனர். இதில், உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 பேர் பலியாயினர். இந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் போலீசார் விகாஸ் துபேயை பிடிக்கச் செல்வதை, போலீசார் ஒருவரே போட்டுக் கொடுத்தது தெரிய வந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து விகாஸ் துபேவை கைது செய்ய போலீசார் சிறப்புக் குழுக்களை அமைத்து தேடி வருகின்றனர். ஆனால், இன்று வரை போலீசாரின் பிடியில் சிக்கவில்லை. நேற்று ஃபரிதாபாத்தில் அவரது உறவினர் வீட்டில் தங்கி இருந்துவிட்டு, அருகில் இருக்கும் ஓட்டலில் தங்குவதற்கு திட்டமிட்டுள்ளார். ஓட்டலுக்கு நேற்று மாலை சென்றுள்ளார். இந்தக் காட்சிகள் அங்கு இருக்கும் சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்யும் முன்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அவருடன் அங்கு தங்கி இருந்த அவரது கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து உத்தரப்பிரதேச சிறப்பு போலீஸ் படை குருகிராம், டெல்லி, ஃபரிதாபாத்தின் மற்ற இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். டெல்லி - என்சிஆர் தேசிய நெடுஞ்சாலையும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே விகாஸ் துபேவுக்கு வலதுகரமாக செயல்பட்டவர் என்று நம்பப்படும் அமர் துபேவை போலீசார் இன்று ஹமிபூர் மாவட்டத்தில் சுட்டுக் கொன்றனர். போலீசார் இவரை பிடிக்கச் செல்லும்போது தப்பி ஓடியதால், சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. இவரை பிடித்துக் கொடுப்பவருக்கு ரூ. 25,000 சன்மானம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச போலீசாரால் அறிவிக்கப்பட்டு இருந்தது.
விகாஸ் துபேவின் மற்றொரு கூட்டாளியான ஜெய் வாஜ்பாய்யை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் இருந்து ஆடி, ஃபார்சுனர், வெர்னா ஆகிய கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தக் கார்களுக்கு ரெஜிஸ்டர் நம்பர் எதுவும் இல்லை.
இதற்கிடையே பாஜக எம்.எல்.ஏ. பகவதி சாகரை விகாஸ் துபே சந்தித்தாக செய்தி வெளியாகியுள்ளது. மற்றொரு எம்.எல்.ஏ.வையும் விகாஸ் சந்தித்துள்ளார். விகாஸின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சங்கர் அக்னிஹோத்ரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாவோயிஸ்ட்டுகள் பாணியில் கான்பூர் போலீசார் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்த விகாஸ் துபே கேங்
Recommended Video
போலீசார் விகாஸ்சை கைது செய்ய செல்லவிருந்த செய்தியை அவருக்கு போட்டுக் கொடுத்த ஸ்டேஷன் மாஸ்டர் வினய் திவாரி பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.