கொடூர பலாத்காரம்.. தலித் பெண் உடலை வேக வேகமாக எரித்த போலீஸ்.. பெரும் நெருக்கடியில் யோகி
உயிரிழந்த பெண்ணின் சடலத்தை போலீசாரே எரித்துள்ளனர்
கான்பூர்: உத்தரப் பிரதேசத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி எடுத்து வருகிறது தலித் பெண்ணின் பாலியல் பலாத்காரமும், அதைத் தொடர்ந்து நடந்த கொலையும், அதை விட முக்கியமாக போலீஸ் தலைமையில் கட்டாயப்படுத்தி அந்த உடல் எரிக்கப்பட்ட விதமும்...!!
தலைநகர் டெல்லியை முன்பு உலுக்கிய நிர்பயா சம்பவத்தை விட மிக மோசமானதாக இது பார்க்கப்படுகிறது. காரணம், பாலியல் பலாத்கார கொலையாளிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போல உடலை இரவோடு இரவாக ஏன் போலீஸார் கட்டாயப்படுத்தி எரித்ததால் அது விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல சந்தேகங்களையும் குற்றச்சாட்டுக்களையும் எழுப்பியுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் பெற்றோரின் அனுமதி கூட இல்லாமல் இப்படி ஒரு காரியத்தை உபி போலீசார் செய்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பிரதமரே இந்த விவகாரத்தில் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுங்கள் என்று உ.பி. முதல்வருக்கு சொன்ன பிறகும் கூட போலீஸார் இப்படி முரட்டுத்தனமாக நடந்திருப்பது அதிர வைப்பதாக உள்ளது.
என்ன நடந்தது?
உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம்தான் சண்ட்பா.. இங்கு வசித்து வந்த 20 வயது தலித் பெண், கடந்த 14ம் தேதி தன் அம்மாவுடன் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். சற்று தொலைவில் அம்மா வேலை பார்க்க, மகள் இன்னொரு பகுதியில் புல் அறுத்து கொண்டிருந்தார்.
கெஞ்சிய பெற்றோர்.. கண்டுகொள்ளாத போலீஸ்.. பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உடல் இரவோடு தகனம்.. உ.பி. ஷாக்
எலும்பு முறிவு
அப்போது, அதே பகுதியை சேர்ந்த 4 உயர் ஜாதி இளைஞர்கள் அந்த பெண்ணை குண்டுகட்டாக தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளனர்... பலாத்காரம் செய்ததுடன், அந்த பெண்ணை கடுமையாக தாக்கியும் உள்ளனர். உடல் முழுவதும் பெண்ணுக்கு எலும்பு முறிவுகள் பல இடங்களில் ஏற்படும் அளவுக்கு கொடூரமாக அடித்துள்ளனர்.. உண்மையை வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக அவரது நாக்கையும் வெட்டியுள்ளனர். இதில் அந்தப் பெண் படுகாயமடைந்தார். அந்தப் பெண்ணை ரோட்டோரமாக வீசி விட்டு அவர்கள் போய் விட்டனர்.
அலறல்
அந்த வழியாக சென்ற கிராமவாசிகள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் பெண்ணை கண்டு, பெற்றோருக்கு விஷயத்தை சொன்னார்கள்.. அவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடி, மகளை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.. சம்பந்தப்பட்ட 4 பேர் மீதும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் சந்தீப், லவ்குஷ், ரவி மற்றும் ராம்குமார் ஆகி 4 பேரை பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை குற்றச்சாட்டு போன்ற பிரிவுகளின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
போராட்டம்
இதெல்லாம் மிக கடுமையான எதிர்ப்பும், போராட்டங்களும், பல்வேறு கட்சிகள், மாதர்ச சங்கங்கள் தலையிட்ட பிறகுதான் நடந்துள்ளது. அதற்கு முன்பு போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
டாக்டர்கள்
இதனிடையே, ஆபத்தான நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாலும், அங்கு நவீன சிகிச்சை இல்லாததால், அருகிலுள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண் சேர்க்கப்பட்டார்.. அவருக்கு இரு கை, கால்களில் உணர்வே இல்லை.. உடம்பில் உள்ள எலும்புகள் நொறுங்கி உள்ளதையும், நாக்கு அறுக்கப்பட்டுள்ளதையும் கண்டு டாக்டர்கள் அதிர்ந்து போனார்கள்.. முதுகெலும்பு முற்றிலுமாக உடைந்திருக்கிறது.. உயிரை காப்பாற்ற எவ்வளவோ போராடியும் அது பலனளிக்கவில்லை.. நேற்று அந்த பெண் இறந்தே விட்டார்.
தலித் பெண்
ஏற்கனவே உபியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டுகளை வீசி வரும் நிலையில், உயிரிழந்த தலித் பெண்ணின் மரணம் மேலும் உலுக்கி போட்டுள்ளது.. உண்மையில் உத்தரப் பிரதேசத்தில் அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் அதிகரித்தபடி உள்ளன. இந்த நிலையில்தான் இந்த கொடூரம் நடந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி முதல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரை கண்டனங்களை வலிமையாக பதிவு செய்தனர்.. ட்விட்டரில் இந்த தலித் பெண்ணுக்கு நீதி கேட்டு ஹேஷ்டேக்கும் வைரலாகி வருகின்றன.
சடலம்
இந்த கொந்தளிப்புக்கு இடையில் இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவமும் நேற்றிரவு நடந்துள்ளது.. உயிரிழந்த பெண்ணின் சடலத்தை எரித்துவிடும்படி, அவரது குடும்பத்தாருக்கு போலீசார் வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.. ஆனால், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.. பின்னர், டெல்லி ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று இரவு ஹத்ராஸிற்கு குடும்பத்தினர் புறப்பட்டனர்... அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் தரப்பட்டிருந்தது.. ஆனால், ஹத்ராஸிற்கு அந்த குடும்பத்தினர் செல்வதற்கு முன்பே பெண்ணின் சடலத்தை உடலை போலீசார் கொண்டு சென்றுவிட்டனர்.. நேரடியாக சுடுகாட்டுக்கே சென்று குடும்பத்தினரின் கதறலையும் மீறி எரியூட்டி விட்டனர்.
சுடுகாடு
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் சொல்லும்போது, "பெண்ணின் தந்தை சுமார் 40 பேருடன் சுடுகாட்டுக்கு சென்றார்... அப்போது பூல் கார்ஹி கிராமத்திற்கு அருகேவுள்ள சுடுகாட்டில்தான் பெண்ணின் உடலை உடனடியாக எரித்தாக வேண்டும் என்று போலீசார் சொல்லி உள்ளனர். எதற்காக சொந்தக்காரர்கள் வருவதற்கு முன்பு போலீசார் இவ்வளவு அவசரம் காட்டினார்கள் என்று தெரியவில்லை.. ஏன் அவர் அப்பாவை கட்டாயப்படுத்தினார்கள்? அவங்களுக்கு என்னதான் வேண்டும்? என்ன மாதிரியான அரசியல் இது? இவ்வளவு நடந்தும், அந்த பெண் பலாத்காரம் செய்யப்படவே இல்லை என்றெல்லாம் சொல்கிறார்கள்.. விஷயத்தை மூடி மறைக்கதான் இப்படி செய்யப்பட்டுள்ளது" என்று கொந்தளித்தனர்.
விசாரணை குழு
ஆனால், ஹத்ராஸ் எஸ்பி விக்ராந்த் விர் சொல்லும்போது "எல்லா நடவடிக்கைகளும் அந்த பெண்ணின் குடும்பத்தார் விருப்பப்படியே நடந்துள்ளது" என்கிறார். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைக்க முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார்... அடுத்த 7 நாட்களுக்குள் இது தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.. மேலும், இந்த விவகாரம் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி தந்துள்ளார்.
பெண் பிள்ளைகள்
சம்பந்தப்பட்ட சண்ட்பா என்ற கிராமத்தில் தாக்கூர், பிராமணர் மற்றும் தலித் என தலா ஐம்பது குடும்பங்கள் சம அளவில் வாழ்ந்து வருகிறார்களாம்.. ஆனாலும், தாக்கூர் சமூகத்தினர் கை அதிகமாக இங்கு ஓங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.. பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி வருவதுடன், இதையொட்டி சாதி ரீதியான இருட்டடிப்புகளும் சேர்ந்து கொண்டுள்ளதால், யோகி அரசுக்கு அழுத்தம் மேல் அழுத்தம் கூடி கொண்டே வருகிறது!