சார்லி ஹெப்டோ தாக்குதலை நடத்தியவர்களுக்கு ரூ. 51 கோடி பரிசு... குரேஷியை தேடும் உ.பி. போலீஸ்!
லக்னோ: பாரீசில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தின் மேல் தாக்குதல் நடத்தியவர்களிக்கு சன்மானம் அளிப்பதாக கூறிய மாயாவதி கட்சியைச் சேர்ந்த ஹாஜி யாக்குப் குரேஷி என்பவரை உத்தர பிரதேச போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
"பாரீசில் சார்லி ஹெப்டோ பத்திரிகை மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு 51 கோடி ரூபாய் பரிசு தர தயார். முகமது நபியை அவமரியாதை செய்பவர்கள் இதேபோன்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தலைவரான ஹாஜி குரேஷி தெரிவித்திருந்தார்.
ஈராக் மற்றும் சிரியாவில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்பாக்தாதியின் கேலிச் சித்திரத்தை சமீபத்தில் வெளியிட்ட பாரீசைச் சேர்ந்த சார்லி ஹெப்டோ வார இதழ் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் பலியாயினர்.
இந்தச் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தாக்குதல் நடத்திய வர்களுக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவரும், அம்மாநில முன்னாள் அமைச்சருமான ஹாஜி யாகூப் குரேஷி குரல் கொடுத்து உள்ளார்.
இதனையடுத்துதான் சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் வலுத்தவுடன் தலைமறைவான அவரைக் கைது செய்ய உத்தர பிரதேச போலீசார் வலை விரித்து தேடி வருகின்றனர்.