குடியுரிமை சட்ட திருத்த போராட்டம்.. வன்முறையாளர்களின் வீடியோ, படங்களை வெளியிட்டது உ.பி. போலீஸ்
மீரட்: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறையாளர்கள் தாக்குதல்களை நடத்தும் வீடியோ, படங்களை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச போலீஸ்.
உத்தரப்பிரதேசத்தில் மீரட், லக்னோ, பிஜ்னோர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை மோசமாக வெடித்தது. இதில் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
மேலும் போலீஸ் வாகனங்கள் உள்ளிட்டவை எரிக்கப்பட்டன. இதனையடுத்து ஏராளமானோரை கைது செய்துள்ள போலீசார், 130 பேரிடம் பொதுசொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக ரூ50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் இப்போராட்டங்களின் போது போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வன்முறையாளர்கள் தொடர்பான வீடியோக்கள், படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதிகபட்சமாக உயிரிழப்பு ஏற்பட்ட மீரட் நகரில் வன்முறையாளர்கள் எப்படியெல்லாம் கலவரத்தில் ஈடுபட்டனர் என்கிற வீடியோவையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
அதில் நீலநிற ஜாக்கெட் அணிந்த முகமூடி மனிதர் ஒருவர் துப்பாக்கியுடன் வலம் வரும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதுவரை போலீசார், பிஜ்னோர் மாவட்டத்தில் மட்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவித்திருக்கின்றனர்.
அப்படியானால் பொதுமக்களில் பலர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது எப்படி என்கிற கேள்வி எழுந்த நிலையில் மீரட் போலீசார் இந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் 21 மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்க்களில் 288 போலீசார் தாக்கப்பட்டுள்ளனர் என்கிறார் உ.பி. டிஜிபி ஓ.பி.சிங். வன்முறை நிகழ்ந்த இடங்களில் துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.