பலாத்காரம் செய்தவர்களுக்கு தண்டனை... நீதி கோரி பிரதமருக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய உ.பி பெண்!
தன்னை பலாத்காரம் செய்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்று உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் பிரதமருக்கு ரத்தத்தில் எழுதியுள்ள கடிதம் நெஞ்சை பதற வைக்கிறது.
பாரபங்கி: தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உத்திர பிரதேசத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ரத்தத்தால் கடிதம் எழுதியுள்ளார்.
உ.பி., மாநிலம் ரேபரேலியில் பொறியியல் படிக்கும் தனது மகளை பலாத்காரம் செய்து மிரட்டி வருவதாக, அவரது தந்தை கடந்த 2017 ம் ஆண்டு மார்ச் மாதம், போலீசில் புகார் அளித்தார். இது குறித்து பாரபங்கி பகுதியை சேர்ந்த திவ்யா பாண்டே மற்றும் அங்கித் சர்மா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து, 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் சில அடையாளம் தெரியாத நபர்கள் அந்த இளம்பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்து ஆபாச படங்களை பதிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் போலீசாரின் விசாரணையால் விரக்தியடைந்துள்ளதாக கடந்த ஜனவரி 20ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார். அதில் தங்கள் தரப்பில் குற்றவாளிகள் மீது போட்டுள்ள வழக்கை திரும்பப் பெறுமாறு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகளுக்கு எதிராக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஏனெனில் அவர்கள் அதிகார பலம் படைத்தவர்கள். இதனால் குற்றவாளிகள் வழக்கை வாபஸ் வாங்குமாறு எங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். எனக்கு நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதை விட வேறு வழியில்லை என்று அந்தப் பெண் உருக்கமாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.