பென்சில், ரப்பர் திருடிய 3ம் வகுப்பு மாணவரை அடித்துக் கொன்ற தலைமையாசிரியர் கைது
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் பென்சில் மற்றும் ரப்பர் திருடிய குற்றத்திற்காக 3ம் வகுப்பு மாணவனை பள்ளித் தலைமை ஆசிரியர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் பாரபாங்கி மாவட்டத்தில் ரயிலமா பகுதியில் திவாரிகா பிரசாத் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மூன்றாவது வகுப்பு மாணவர்களின் பென்சில், ரப்பர் போன்றவை சமீபகாலமாக காணாமல் போய் வந்துள்ளது.
எனவே, இது தொடர்பாக அம்மாணவர்கள் வகுப்பாசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். அவர் வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களின் புத்தகப்பையையும் சோதனை போட்டுள்ளார். அப்போது இரண்டு மாணவர்களின் புத்தகப் பைகளில், காணாமல் போன மற்ற மாணவர்களின் பென்சில், ரப்பர் போன்றவை இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.
இது தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தலைமை ஆசிரியரும் சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர்களைக் கூப்பிட்டு கண்டித்துள்ளார். அப்போது இரண்டு மாணவர்களையும் அவர் அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த 11 வயது மாணவர் ஓருவர் வீட்டிற்கு சென்றதும் வயிற்று வலியால் துடித்துள்ளார், பின்னர் ரத்த வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட மாணவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமை ஆசிரியரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்தாண்டு டிசம்பர் மாதம் உத்திரப்பிரதேசத்தில் இதேபோன்று 7 வயது மாணவர் ஒருவர் ஆசிரியரால் அடித்துக் கொல்லப் பட்டார். இந்நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது, அங்குள்ள பெற்றோர் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.