மக்களே! தயவு செய்து எனக்கு ஓட்டு போடாதீங்க!!… கெஞ்சும் வேட்பாளர்
நொய்டா: வாக்காளப்பெருமக்களே எப்படியாவது எனக்கு ஓட்டளித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று வேட்பாளர்கள் வாக்கு கேட்டு வருவார்கள்.
ஆனால் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர், தயவு செய்து எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்.
உ.பி. மாநிலம் கவுதம் புத்தா நகர் லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் கட்சி ரமேஷ் சந்த் தோமர் என்பவரை தனது வேட்பாளராக, நிறுத்தியது. ஆனால் அவர் தேர்தலுக்கு ஒருவாரம் இருக்கும் போது பாஜகவில் சேர்ந்துவிட்டார். இதனால்தான் இப்படி தனக்கு எதிராகவே அவர் வாக்கு கேட்டு வருகிறார்.
பாஜக பூர்வீகம்
கடந்த, 1991,1996,1998,1999 ஆகிய ஆண்டுகளில், காஜியாபாத் - ஹபூர் தொகுதியில், பா.ஜ.க சார்பில் நின்று வெற்றி பெற்று எம்.பி., ஆனவர்தான் இந்த ரமேஷ் சந்த் தோமர்.
காங்கிரசிடம் தோல்வி
கடந்த 2004-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் கவுதம் புத்தா நகர் தொகுதியில் பா.ஜ.கவால் நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்.
இதையடுத்து, 2009 தேர்தலில் இந்தத் தொகுதி ராஜ்நாத் சிங்குக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த தோமருக்கு கடந்த தேர்தலில் கவுதம் புத்தர் தொகுதி ஒதுக்கப்பட்டது. அங்கு அவர் தோல்வி அடைந்தார்.
மீண்டும் வேட்பாளர்
ஏப்ரல் 10ம் தேதி உ.பி.,யில் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க உள்ள நிலையில், தோமரை, கவுதம் புத்தா நகர் தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
மீண்டும் பாஜக
இந்த நிலையில், திடீரென கடந்த 3ம் தேதி, டெல்லியில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில், கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் முன்னிலையில், கட்சியில் இணைந்தார். அவரை மோடி, ஆரத் தழுவி வரவேற்றார். சம்பவம் நடப்பதற்கு முதல்நாள் இதுகுறித்து வதந்திகள் பரவின. ஆனால், ""சேச்சே! நான் அப்படிப்பட்டவன் இல்ல,'' என, "யோக்கியன்' ரீதியில் தோமர் மறுத்தார்.
எண்ணங்கள் ஒத்துப்போகலை
பாஜகவில் சேர்ந்த பின், ""பா.ஜ., கட்சியோடு மட்டும் தான் எனது எண்ணங்கள் ஒத்து போகின்றன,'' என, சரவெடி போட்டார்.இந்த சம்பவத்தால், அதிகம் பாதிக்கப்பட்டது காங்கிரஸ்தான் தான். வேட்பாளர் தனது மனுவை திரும்ப பெறும் தேதியும் முடிந்த பின் தான், தோமர், எதிர்முகாமுக்கு தாவி இருக்கிறார்.
கேஸ் போட்ட காங்கிரஸ்
இனிமேல், சம்பந்தப்பட்ட தொகுதிக்கு புதிய வேட்பாளரையும் அறிவிக்க முடியாது. காங்கிரஸ் கட்சி என்ன செய்வதென்று தெரியமால் விழித்து கொண்டிருக்கிறது. கட்சி தலைவர்கள், தோமர் மீது, போலீசில் புகார் அளித்துள்ளனர். அது இனி வழக்கு, விசாரணை, கோர்ட், வாய்தா என, பல ஆண்டுகள் நடக்கும்.
எனக்கு ஓட்டு போடாதீங்க
இது ஒருபுறம் இருக்க, தற்போது சட்டப்படி, தோமர் தான், கவுதம் புத்தா நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர். முன்னாள் எம்.பி., தோமர் இப்போது தனது தொகுதியில் பிரசாரம் செய்யும் போது,"மக்களே! தயவு செஞ்சு, மறந்தும் எனக்கு மட்டும் ஓட்டு போட்றாதீங்க, மக்களே!' என்று வாக்கு கேட்கிறார்.
மோடி வெற்றிக்கு பாடுபடுவேன்
"நீண்டகாலமாக பாஜகவில் இருந்து வந்த நான், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உணர்ச்சிவசப்பட்டு காங்கிரஸில் சேர்ந்தேன். இப்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளேன். நாடு முழுவதும் நரேந்திர மோடிக்கு ஆதரவான சூழல் நிலவுகிறது. அவரால் மட்டுமே சிறந்த நிர்வாகத்தை தர முடியும். எனவே, அவரது வெற்றிக்காக பாடுபடுவேன்" என்றும் அவர் கூறுகிறார்.
இந்தியாவில் மட்டும்தான்
இவருடன் சேர்த்து 2 வேட்பாளர்கள் பாஜகவுக்கு தாவியதால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாகிரத் பிரசாத் அறிவிக்கப்பட்டார். மறுதினமே அவர் பாஜகவில் இணைந்தார். வாக்குப்பதிவுக்கு சில தினங்களே உள்ள நிலையில் பாஜகவில் காங்கிரஸ் வேட்பாளர் தோமர் இணைந்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். இந்தியாவில் மட்டும்தான் இப்படி எல்லாம் நடக்கும் போங்கள்!