எப்.ஐ.ஆர். பதிவு செய்ய பீட்சாவும், சில்லி சிக்கனும் கேட்ட பெண் போலீஸ் அதிகாரி சஸ்பென்ட்
பீட்சா லஞ்சம் கேட்ட பெண் போலீஸ் உதவி ஆய்வாளர் சஸ்பெண் வ்ப்ன் ட் செய்யப்பட்டார்.
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் புகார் அளிக்க வந்தவரிடம் பீட்சா வாங்கித் தரச்சொன்ன பெண் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னா மாவட்டம் ஹசன்காஞ்சு எனும் ஊரைச் சேர்ந்தவர் ரோஹித் பேரி. அதே ஊரில் ஓட்டல் நடத்தி வரும் இவர், சிலர் மீது புகார் அளிப்பதற்காக கடந்த வியாழக்கிழமை மாலை காவல் நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் சுமித்திரா தேவி, புகாரை பதிவு செய்ய பீட்சாவும், சில்லி சிக்கனும் லஞ்சமாக வேண்டும் என ரோஹித் பேரியிடம் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரோஹித் பேரி, இந்த சம்பவம் பற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது வைரலானதைத் தொடர்ந்து, சம்பவம் பற்றி விசாரிக்க காவல் துறை அதிகாரிகளுக்கு, உன்னா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சுமித்திரா தேவி பீட்சா கேட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
புகார்தாரரிடம் பீட்சா கேட்டு பெண் எஸ்.ஐ. சஸ்பென்ட் ஆன விவகாரம் உத்தரபிரதேச மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் வைரலாகியுள்ளது.