ஆம்புலன்ஸ் மறுப்பால் இறந்த பச்சிளம் குழந்தையுடன் விடிய விடிய கதறிய தாய்- அதிர்ச்சி வீடியோ #ambulance
மீரட்: உத்தரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் விடிய விடிய உயிரிழந்த பச்சிளம் குழந்தையுடன் தாய் கதறி அழும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக ஆம்புலன்ஸ் மறுப்பால் சடலங்களை பெற்றோரும் உறவினரும் தோளில் சுமந்து செல்லும் துயர செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஒடிஷாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் மனைவியின் சடலத்தை 12 கி.மீ. தூரம் தூக்கிச் சென்ற சம்பவம் உலகையே அதிர வைத்தது.
இதேபோல் அடுத்தடுத்த சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதேபோன்ற துயரம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த பச்சிளம் குழந்தை
உத்தரப்பிரதேசத்தின் பக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இம்ரனா, உடல்நலம் பாதிக்கப்பட்ட தமது இரண்டரை வயது மகளான குல்நாத்தை மீரட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பச்சிளம் குழந்தை இறந்துவிட்டது.
ஆம்புலன்ஸ் கட்டணம் இல்லை
இந்த துயரம் ஆறாமல் தாய் அழுது கொண்டிருந்தநிலையில் குழந்தையின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸ் ரூ 2,500 கட்டணம் கேட்டது. இதை கொடுக்க இம்ரானிடம் பணம் இல்லை.
விடிய விடிய கதறல்
இதனால் இரவு முழுவதும் விடிய விடிய மருத்துவமனை வளாகத்தில் உயிரிழந்த பச்சிளம் குழந்தையுடன் உடலுடன் இம்ரனா இருந்தார். மறுநாள் காலையில் சிலரின் உதவியால் ஆம்புலன்ஸ் மூலம் மகளின் உடலை ஊருக்கு இம்ரனா கொண்டு சென்றார்.
விசாரணைக்கு உத்தரவு
இந்த தகவல் வெளியானதை அறிந்த மாவட்ட மாஜிஸ்திரேட் இதுதொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். கடந்த சிலநாட்களுக்கு முன்தான் அம்மாநிலத்தில் மேல்சிகிச்சைக்காக மகனின் உடலை மருத்துவமனையில் உள்ள மற்றொரு பிரிவுக்கு தோளில் தூக்கி சென்றபோது மகன் தோளிலே இறந்த சம்பவம் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.