உயிருக்கு போராடும் ஹனுமந்தப்பாவுக்கு சிறுநீரகம் தர முன் வரும் பெண், ஓய்வு பெற்ற காவலர்
டெல்லி: டெல்லி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் வீரர் லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பாவுக்கு சிறுநீரகத்தை தானமாக அளிக்க நிதி பாண்டே என்ற இல்லத்தரசியும், ஓய்வு பெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை ஏட்டும் முன் வந்துள்ளனர்.
சியாச்சின் போர் முனையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 நாட்கள் கழித்து 25 அடி ஆழ பனியில் இருந்து கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டார். மீட்கப்பட்டபோது அவருக்கு சுயநினைவிருந்தது.
டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார்.
உயிர் போராட்டம்
தொடர்ந்து கோமாவில் இருக்கும் ஹனுமந்தப்பாவுக்கு நிமோனியா ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் பிரச்சனையாக உள்ளது. அவரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
சொல்ல முடியாது
ஹனுமந்தப்பாவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இருப்பினும் அவரது நிலைமை பற்றி தற்போதைக்கு எதுவும் கூற முடியாது என்கிறார்கள்.
சிறுநீரகம்
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நிதி பாண்டே என்ற இல்லத்தரசி உள்ளூர் செய்தி சேனலை தொடர்பு கொண்டு ஹனுமந்தப்பாவுக்கு தான் தனது சிறுநீரகத்தை தானமாக அளிக்க தயார் என்றும், இதை ராணுவத்தினரை எப்படி அணுகி தெரிவிப்பது என்றும் கேட்டுள்ளார்.
ஏட்டு
டெல்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை ஏட்டு பிரேம் ஸ்வரூப் ஹனுமந்தப்பா அனுமதிக்கப்பட்டுள்ள ஆர் அன்ட் ஆர் மருத்துவமனைக்கு சென்று தனது சிறுநீரகத்தை அந்த வீரருக்கு தானமாக அளிப்பதாக கூறியுள்ளார்.
பிரார்த்தனை
கடும் குளிரில் 6 நாட்களாக போராடிய நீங்கள் மருத்துவமனையில் நடத்தும் உயிர் போராட்டத்திலும் வென்று குணமடைய வேண்டும் என்று கூறி நாட்டு மக்கள் ஹனுமந்தப்பாவுக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.