காங்கிரஸ் ஆட்சியில்தான் பணவீக்கமும் ஊழலும் அதிகரித்துவிட்டது: ராஜ்நாத்சிங் தாக்கு!
போபாலில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் ராஜ்நாத் பேசுகையில், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடியை உருவாக்க பாரதிய ஜனதா தொண்டர்கள் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். பாரதிய ஜனதா தொண்டர்களின் கடுமையான உழைப்பு மட்டும்தான் நரேந்திர மோடியை நாட்டின் பிரதமராக்கும்.
மத்திய பிரதேசத்தில் நல்லாட்சியை நடத்தி வருகிறார் முதல்வர் சிவ்ராஜ்சிங் செளகான். கனவில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நாட்டில் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பணவீக்க விகிதமும் ஊழலும் அதிகரித்துவிட்டன. அஜ்மீர் குண்டுவெடிப்பில் ஹிந்து இயக்கத் தலைவர்களை எப்படியெல்லாம் சிக்க வைக்கின்றனர் என்பதை பவேஸ் படேலின் கடிதம் அம்பலப்படுத்தியிருக்கிறது. இதுதான் காங்கிரஸின் உண்மை முகம். இது தோலுரிக்கப்பட்டுள்ளது என்றார்.
ராஜ்நாத் சிங் பேசிக் கொண்டிருந்த போது மோடியை வாழ்த்தி விண்ணைப் பிளக்கும் முழக்கங்கள் எழுப்பப்பட்டுக் கொண்டே இருந்தன.