எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்- நாளை அறிவிப்பு வெளியாகும்?
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் நாளை இறுதி செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி : குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. வேட்பாளர் யார் என்று நாளை அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, புதிய குடியரசுத்தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு ஜூன் 14 முதல் தேர்தல் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. புதிய குடியரசுத் தலைவரை ஒருமனதாகத் தேர்வுசெய்ய, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக அழைப்பு விடுத்ததுடன், அந்தக்கட்சிகளித் தலைவர்களையும் மத்திய அமைச்சர்கள் சந்தித்து இது குறித்து பேசினர்.
ஆனால் எதிர்க்கட்சிகள் தங்களது கருத்தை கூறுவதற்கு முன்னரே தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பீஹார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை வேட்பாளராக அறிவித்ததற்கு அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் வரவேற்பு தெரிவித்திருந்தார்.
ஆதரவு யாருக்கு?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அச்சாத ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் பாஜக வேட்பாளருக்கு வரவேற்பு தெரிவித்துள்ளதையடுத்து, பாஜ வேட்பாளருக்கு நிதிஷ்குமார் ஆதரவு தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதே போன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பாஜக வேட்பாளர் குறித்து வெளிப்படையாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் அவருடைய ஆதரவு யாருக்கு என்பது கடுமையான விவாதத்திற்கு ஆளாகியுள்ளது.
சிவசேனா கைகோர்ப்பு
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அமைப்பு வேட்பாளராக அறிவிக்க பரிந்துரை செய்த இரண்டு பேரை விட்டு விட்டு பாஜக புதிதாக ஒருவரை வேட்பாளராக அறிவித்தது. இந்நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைப்படி பாஜகவின் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. தலித் வாக்குகளைக் கவரவே குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் உத்தவ் தாக்கவே கூறியுள்ளார்.
நாளை கூட்டம்
குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து சடங்கிற்காக பேச்சுவார்த்தை நடத்திவிட்டு உடனடியாக வேட்பாளரை அறிவித்தது துரதிஷ்டசவமானது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று ஜூன் 22ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அறிவிப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் பணி
ஜூன் 23ஆம் தேதி பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனால் நாளையே வேட்பாளரை இறுதி செய்து அறிவிக்கும் முனைப்பில் காங்கிரஸ் இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த கூட்டத்தில் பங்கேற்க திரிணாமுல் காங்கிரஸ், ஜக்கிய ஜனதா தளம், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது.
அதிமுக கையில் பந்து
தமிழகத்தை பொருத்த வரை திமுகவின் ஆதரவு காங்கிரஸ் வேட்பாளருக்கே என்பதே அறியப்பட்ட ஒன்று, ஆனால் அதிமுகவின் 50 எம்பிக்கள் 135 எம்எல்ஏக்களின் ஆதரவு யாருக்கும் என்பதைப் பொறுத்து குடியரசுத்தலைவர் தேர்தல் முடிவு இருக்கும் என்பதால், அதிமுகவின் ஆதரவு குறித்த முடிவு உற்று நோக்கப்படுகிறது.